பெரம்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு...! - ரூ.5 கோடி போதைப்பொருள் சிக்கியது...!
There commotion Perambur railway station 5 crore drugs seized
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ரூ.5 கோடி மதிப்பிலான உயர்தர போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் காலத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களில் கண்காணிப்பு வலையை பலப்படுத்திய நிலையில் இந்த அதிரடி கண்டுபிடிப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் இணைந்து பல்வேறு ரயில் நிலையங்களில் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஆர்.பி.எப் காவலர்கள், ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன், ராஜேஷ் உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த நேரத்தில் அசாம் மாநிலம் நியூ திண்சுகியா பகுதியில் இருந்து பெங்களூரு நோக்கி பயணித்த விரைவு ரயில் பெரம்பூரை வந்தடைந்தது. உடனடியாக பொதுப் பெட்டியில் சோதனை மேற்கொண்ட காவலர்கள், நீண்ட நேரமாக யாரும் உரிமை கோராத சந்தேகத்துக்கிடமான ஒரு சூட்கேஸை கவனித்தனர்.
அதை திறந்து பரிசோதித்தபோது, அதன் உள்ளே நான்கு தொகுப்புகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பவுடர் போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.மேலும் ஆய்வு செய்ததில், அவை ‘ஹைட்ரோபோனிக்’ வகையைச் சேர்ந்த உயர்தர போதைப்பொருளாக இருப்பது தெரியவந்தது.
சுமார் 5 கிலோ எடை கொண்ட இந்த போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு ரூ.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைக்காக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பொருட்களை ரயிலில் கடத்தியவர் யார்? காவலர்களின் சோதனையை உணர்ந்து அவற்றை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியாரா? என்ற பல்வேறு கோணங்களில் காவலர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
There commotion Perambur railway station 5 crore drugs seized