நாகர்கோவில் அருகே இளம் பெண்ணின் எலும்பு கூடு; 03 மாதங்களுக்கு முன் எரித்துக்கொலை..? யார் என்று அடையாளம் தெரியாத நிலையில், போலீசார் தீவிர விசாரணை..!
The skeleton of a young woman who was burned to death 3 months ago has been discovered near Nagercoil
நாகர்கோவில் சுங்கான்கடையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி அருகே, ஆள் நடமாட்டம் இல்லாத புதர் பகுதியில் எரிந்த நிலையில் எலும்பு கூடாக இளம்பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் அருகே சுங்கான்கடை அம்பேத்கர் நகரை தாண்டி புதர்கள் மண்டி கிடக்கும் பகுதியில் மனித எலும்பு கூடு எரிந்த நிலையில் கிடப்பதாக இரணியல் போலீசாருக்கு நள்ளிரவு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில், உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்கு கிடந்த உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது உடல் முழுவதும் எரிந்த நிலையில் வெறும் எலும்பு கூடுகள் மட்டுமே கிடந்துள்ளது. அத்துடன் அந்த உடல் திமிறி எழாதவாறு மெல்லிய கம்பியால் சுற்றி கட்டப்பட்டு எரிக்கப்பட்டிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எலும்புக்கூட்டில் நீண்ட தலை முடி கருகிய நிலையிலும், அருகே ஹேர்பின், பெண்கள் அணியும் உள்ளாடை, சேலை ஆகியவை எரிந்த நிலையிலும் காணப்பட்டுள்ளது. எரிந்து எலும்புக் கூடாக இருந்த உடல், 20 வயது மதிக்கதக்க இளம்பெண் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த சூழலில்,குறித்த இளம்பெண் யார்..? எந்த ஊர்..? என்பது உள்பட எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. ஏனெனில், சுங்கான்கடை பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, மகளிர் கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி என்று ஏராளமான கல்லூரிகள் உள்ளன. இதனால், இந்த கல்லூரிகளில் மாணவர் மற்றும் மாணவிகள் விடுதிகளும் அதிக அளவில் உள்ளன.

இந்நிலையில், இந்த கல்லூரிகளின் மாணவிகள் யாராவது காணாமல் போய் உள்ளனரா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அத்துடன், சமீபத்தில் குமரி மாவட்டத்தில் காணாமல் போன இளம்பெண்கள் குறித்து பதிவான வழக்குகள் குறித்த தகவல்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். கொலையான இளம்பெண்ணின் உடலில் இருந்து தங்க செயின் ஒன்றை போலீசார் கண்டெடுத்துள்ளனர். இதன் மூலம் விசாரணையை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இளம்பெண்ணின் உடல் கிடந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாத புதர் மண்டிய பகுதி என்பதால் இந்த சம்பவம் வெளியில் வர அதிக நாட்கள் ஆகியுள்ளது. அத்துடன், இந்த கொலை நடந்து சுமார் 03 மாதமாவது இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
English Summary
The skeleton of a young woman who was burned to death 3 months ago has been discovered near Nagercoil