அமைச்சக உதவியாளர் பணிகளுக்கு மறு தேர்வை நடத்த வேண்டும்..அதிமுக வலியுறுத்தல்!
The re-examination for the ministerial assistant positions should be conducted AIADMKs insistence
அமைச்சக உதவியாளர் பணிகளுக்கு நடந்த தேர்வை முழுமையாகவோ அல்லது ews பிரிவினருக்கு உரிய தேர்வு முடிவை ரத்து செய்துவிட்டு மறு தேர்வை அரசே நடத்த வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது:.புதுச்சேரியில் நீண்ட நெடு நாட்களுக்குப் பிறகு 256 அமைச்சக உதவியாளர் பணிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் சுமார் 10,766-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதில் பொது பிரிவில் 104 பேரும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 46 பேரும், அட்டவணை இனத்தவர் பிரிவில் 41 பேரும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 28 பேரும், முற்படுத்தப்பட்டோர் பிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் 25 பேரும், EBS பிரிவில் 5 பேரும், BCM புரிவில் 5 பேரும், BT பிரிவில் ஒருவரும், ST பிரிவில் ஒருவரும் என இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
மத்திய பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் முற்படுத்தப்பட்ட பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி இட ஒதுக்கீட்டில் பயன்பெறாத முற்படுத்தப்பட்டவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டில் 25 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த 25 நபர்களில் ஏனாம் சட்டமன்ற தொகுதியில் இருந்து சுமார் 23 நபர்களும், மாகே, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மூன்று பிராந்தியங்களில் இருந்து இரண்டு நபர்களும் தேர்வாகியுள்ளனர்.
ஒவ்வொரு பணி நியமனத்தின் பொழுதும் 10% EWS பிரிவில் முழுக்க முழுக்க ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுகின்றனர். அதற்கு முதல் காரணம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள தாலுக்கா அலுவலகங்களில் உரிய சான்றிதழ் வழங்காமல் மறுக்கப்படுகின்றன. ஆனால் ஏனாம் பிராந்தியத்தில் மட்டும் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு இச்சான்றிதழ் தடையின்றி வழங்கப்படுகின்றன..
மத்திய அரசின் இட ஒதுக்கீடு பிரிவில் பயன்பெறாத அனைத்து ஜாதியினருக்கும் இச்சட்டத்தில் இடம் உண்டு. உதாரணத்திற்கு அய்யர், ஐயங்கார், ரெட்டியார், உள்ளிட்ட பல பிரிவினர் பெறலாம் என சட்டம் இருந்தும், புதுச்சேரியில் இருந்து ஏன் இந்த இட ஒதுக்கீட்டில் எப்பொழுதும் யாரும் பயன்பெறவில்லை என அரசு உணரவில்லை. தற்போதைய அமைச்சக உதவியாளர்கள் பணி தேர்வில் புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு, திட்டமிட்டு ஏனாம் பகுதியில் உள்ளவர்களுக்கு பணி கிடைக்க அரசே அதற்குரிய வழிவகையை செய்துள்ளது.
எனவே நடைபெற்றுள்ள இத்தேர்வை முழுமையாகவோ அல்லது ews பிரிவினருக்கு உரிய தேர்வு முடிவை ரத்து செய்துவிட்டு மறு தேர்வை அரசே நடத்த வேண்டும்.
1964-ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்தும் தனது அறியாமையால் பிறப்பு, வசிப்பிடம் ஆதாரங்களை பதிவு செய்யாதவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக புதுச்சேரியில் பிறந்து, புதுச்சேரியில் படித்து அரசு பணிக்கான தேர்வில் எந்த இட ஒதுக்கீட்டிலும் கொண்டு வரப்படாமலும், உரிமை மறுக்கப்படும் புதுச்சேரியைச் சேர்ந்த அட்டவணை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும், முற்படுத்தப்பட்ட இனத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவினரில் ஒதுக்கீடு வழங்கினால் சமநீதி காப்பாற்றப்படும். இதையும் முதல்வரும், துணைநிலை ஆளுநரும் கருத்தில் கொண்டு நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைந்தவுடன் தமிழகத்தை ஆளும் திமுகவின் முதலமைச்சர் ஸ்டாலின் தோல்வி பயம் ஏற்பட்டுவிட்டது. தனது ஊழல்மிக்க, செயல்படாத விடியா அரசின் தவறுகளை ஆதாரப்பூர்வமாக எங்களின் கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் தமிழக முன்னாள் முதலமைச்சர், புரட்சித்தமிழர் எடப்பாடியார் தினந்தோறும் எடுத்துரைப்பவருக்கு பதிலளிக்க வக்கற்ற திமுக தனிப்பட்ட முறையில் வசைபாடுவதும், சமூக வலைதளங்களில் கேலி செய்வதுமாக உள்ளனர்.
நம் இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்களை திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பாராளுமன்ற உறுப்பனிர் திரு.ராசா அவர்கள் அமித்ஷா ஒரு முட்டாள் என ஆணவத்தின் உச்சியில் பொதுமேடையில் பேசியுள்ளார். திமுகவை எதிர்க்கும் அதிமுக பாஜக உள்ளிட்ட தலைவர்களை திமுகவை சேர்ந்தவர்கள் கேவலமாக பேசுவதை அனுமதிப்பது என்பது தமிழக முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களின் வக்கரபுத்திக்கு எடுத்துக்காட்டான ஒன்றாக உள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்பவரையும் தரைக்குறைவாக விமர்சிப்பது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.
அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு உரிய பாடபுத்தகங்கள், சீருடைகள் காலத்தோடு வழங்க வேண்டும். உயர் கல்வியில் மருத்துவ இடஒதுக்கீடு போன்று அனைத்து பாடப்பிரிவுகளிலும் 10 சதவீத இடஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் அரசாணையை உடனடியாக வழங்க வேண்டும். அப்படி இல்லையென்றால் எங்களது கழக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் அனுமதியை பெற்று மாபெரும் போராட்டத்தை அதிமுக நடத்தும் என்பதை அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்- அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்.
English Summary
The re-examination for the ministerial assistant positions should be conducted AIADMKs insistence