முதலமைச்சரின் புதிய அறிவிப்பு; பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு..!
The protest by part time teachers that was underway in Chennai has been postponed
சென்னையில் நடைபெற்று வந்த பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை தொடர்ந்து, ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது, சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது பதிலுரையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இதில் பகுதி நேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண்கள் மூலம் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று உறுதி அறிவித்துள்ளார். இதையடுத்து அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட ஏதுவாக, இதற்கான தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும் என்றும், இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து பகுதிநேர ஆசிரியர்களின் கூட்டியக்க அறிக்கை வெளியிட்டு அதில் கூறியுள்ளதாவது:
17 நாட்களாக சென்னை DPI-இல் நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம், முதலமைச்சர் மற்றும் பள்ளிகல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகள் கொடுத்த உறுதியின் படி, எங்களுக்கு பாதகம் இல்லாத அரசாணை வரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்திவைக்கின்றோம் என கூறப்பட்டுள்ளது.
English Summary
The protest by part time teachers that was underway in Chennai has been postponed