ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் 100 கோடி நஷ்டஈடு வழக்கு; ஐபிஎஸ் அதிகாரி மனு; எம்.எஸ் தோனிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
The Madras High Court has ordered MS Dhoni to file a response by Oct 9 to the petition filed by an IPS officer regarding the IPL gambling case
முன்னாள் இந்திய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி, ரூ.100 கோடி மான நஷ்டஈடு கோரிய விவகாரத்தில் அவரது வாக்குமூலத்தை முழுமையாக வீடியோ பதிவு செய்து வழங்குமாறு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தாக்கல் செய்த மனுவுக்கு எம்.எஸ்.தோனி வரும் அக்டோபர் 09-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் தன்னை சம்பந்தப்படுத்தி அவதூறு பரப்பியதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அதன் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக ரூ.100 கோடி மான நஷ்டஈடு கோரி கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2014-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
குறித்த வழக்கில் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக சம்பத்குமார் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது; ''தோனியின் வாக்குமூலப் பதிவை நட்சத்திர விடுதி அல்லது தனியார் பங்களாவில் நடத்தாமல், நீதிமன்றம் அல்லது அரசுக் கட்டிடத்தில் நடத்த உத்தரவிட வேண்டும். அதை கண்காணிக்க நீதிபதியை நியமிக்க வேண்டும். வாக்குமூலத்தை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். அந்த வீடியோவை எடிட் செய்யாமல் தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும்.''என்று கூறப்பட்டிருந்தது.
குறித்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி கே.ஜி.திலகவதி முன்பு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு எம்.எஸ்.தோனி வரும் அக்டோபர் 09-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
English Summary
The Madras High Court has ordered MS Dhoni to file a response by Oct 9 to the petition filed by an IPS officer regarding the IPL gambling case