மீன்பிடி தடைக்காலம் முடிந்தது உற்சாகமாக கடலுக்குச் சென்ற மீனவர்கள்!
The fishing ban period has ended and the fishermen are excited to go to the sea
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்தது நள்ளிரவு 12 மணிக்கு மேல் தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோர மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் உற்சாகமாக மீன்பிடிக்கச் சென்றனர் .
மீன்களின் இனப்பெருக்கத்துக்கு உகந்த காலமாக ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் உள்ளன. , இந்த காலக்கட்டத்தில், மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால்,, கடந்த 2001-ம் ஆண்டு முதல் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகளுக்கு தடைவிதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தின் வங்கக்கடலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 14-ந் தேதி நள்ளிரவு வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவது இல்லை. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முதல் கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி கிராமம் வரை 1,076 மைல் தொலைவுள்ள கிழக்கு கடலோர பகுதியில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், 12 மாவட்டங்களில் 6,700 விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாமல் கரையில் ஓய்வெடுத்து வந்தன.
ஆனால் பைபர் படகுகள், கட்டுமரங்களில் சென்று மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் வங்கக் கடலில் மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், விசைப்படகு மீனவர்கள் மீண்டும் தொழிலுக்கு செல்ல ஆயத்தமாகினர்.ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது, ஒரு வாரத்திற்கு தேவையான அனைத்தையும் விசைப்படகுகளில் மீனவர்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.
அந்த வகையில், மீண்டும் மீன்பிடிக்க செல்ல விசைப்படகுகளில் மீன்களை பதப்படுத்திவைக்கும் கீழ் அறைகளில் ஐஸ் கட்டிகளை நிரப்பி வைப்பது, தேவையான அளவு குடிநீர் கேன்களை வாங்குவது, படகுகளிலேயே உணவு சமைக்க தேவையான பொருட்களை எடுத்துச்செல்வது போன்ற பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர்.
இதனால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பரபரப்பாக காணப்பட்டது. இந்த நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு மேல் தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோர மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் உற்சாகமாக மீன்பிடிக்கச் சென்றனர் .
English Summary
The fishing ban period has ended and the fishermen are excited to go to the sea