கேரளாவுக்கு கடத்த முயன்ற 2000 கிலோ வெடிபொருள் பறிமுதல்.!!
2000 kilo Gelatin sticks seized in coimbatore
சேலத்தில் இருந்து கேரளாவுக்கு கோவை மாவட்டம் வழியாக சட்டவிரோதமாக வெடி மருந்துகள் கடத்தபடுவதாக தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீசார் இன்று கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், போலீசார் மதுக்கரை வழியாக கேரளாவுக்கு சென்ற வாகனத்தை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரணை செய்தனர். அதற்கு அந்த வாகன ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணாக எந்த தகவலையும் தெரிவிக்காததால் போலீசார் வாகனத்தில் ஏறி சோதனை நடத்தினர்.

அதில் சுமார் 2000 கிலோ ஜெலட்டின் குச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியபோது கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த தனது நண்பரான ஷஃபி என்பவர், சேலத்தில் இருந்து கேரளாவுக்கு வாகனத்தை இயக்கி வருமாறு கூறியதாகவும், வாகனத்தின் உள்ளே என்ன இருக்கிறது என்பது குறித்து தனக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் 2000 கிலோ ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்து மதுக்கரை காவல்நிலைய போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் ஜெலட்டின் குச்சிகளை அனுப்பி வைத்த ஷஃபி என்ற நபரை பிடிக்க ஒரு தனிப்படை கேரளா விரைந்துள்ளது. நாளைய தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவத்தை நிகழ்த்த இந்த ஜெலட்டின் குச்சிகள் கொண்டு செல்லப்பட்டதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
2000 kilo Gelatin sticks seized in coimbatore