காங்கிரஸ் கடைசி மூச்சு வரை போராடும் - செல்வப்பெருந்தகை உறுதி!
The Congress will fight until the last breath Selvap Perunthagai assures
எந்த அச்சுறுத்தலுக்கும், எந்த அடக்குமுறைக்கும் நாம் பணிய மாட்டோம். மக்களின் உரிமைக்காக காங்கிரஸ் கட்சி கடைசி மூச்சு வரை போராடும் என்று செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையை பறிக்கும் அளவுக்கு பாஜக அட்டூழியத்தில் இறங்கியுள்ளது. தேர்தல் என்றால் மக்களின் உரிமை, மக்களின் குரல்,ஆனால் இன்று தேர்தல் ஆணையமே பாஜக அரசின் கைப்பாவையாகி, அதன் கைகளைப் பிடித்து ஜனநாயகத்தின் இதயத்தில் குத்தி இரத்தம் சிந்தச் செய்கிறது. பாஜக அரசின் நாசக் கருவியாக மாறியிருப்பது நாட்டின் வரலாற்றிலேயே மிகப் பெரிய அவமானம்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி இதுவரை 89 லட்சம் புகார்கள் அனுப்பியும், அந்த புகார்களை நிராகரித்து விட்டது தேர்தல் ஆணையம். மக்கள் வாக்குரிமை பறிக்கப்படுவது ஒரு சாதாரண தவறு அல்ல, அது ஜனநாயகத்தை சிதைக்கும் கொடூர குற்றம்.
இந்த நிலையில், மக்கள் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றும்போது, 'பிரதமரை வாக்கு திருடன் என்று சொல்ல வேண்டாம் என என்னிடம் வற்புறுத்தினார்கள்' என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். வாக்கு திருடனை வாக்கு திருடன் என்றே தான் அழைக்க வேண்டும். அந்தச் சொல் எரிச்சலை ஏற்படுத்தினாலும், அது மக்களின் குரல், அது ஜனநாயகத்தின் உண்மை.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நான் வலியுறுத்தி கூறுகிறேன்– இந்த அநீதி இனிமேலும் சகிக்க முடியாது. முறைகேடாக நீக்கப்பட்ட ஒவ்வொரு வாக்காளரையும் மீண்டும் சேர்க்க வேண்டும். இல்லையெனில் இந்த ஜனநாயகக் கொலைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தெருக்களில் இறங்கி குரல் கொடுத்து, பாஜக அரசையும் அதன் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையத்தையும் மக்கள் முன் வெளிச்சம் போட்டு நிறுத்தும்.
ஜனநாயகம் என்பது எங்களின் உயிர், வாக்குரிமை என்பது எங்களின் மூச்சு. இந்த அராஜகம் எரிமலை போல எரிந்தெழுந்து எதிர்ப்பு புயலாக மாறும். எந்த அச்சுறுத்தலுக்கும், எந்த அடக்குமுறைக்கும் நாம் பணிய மாட்டோம். மக்களின் உரிமைக்காக காங்கிரஸ் கட்சி கடைசி மூச்சு வரை போராடும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
English Summary
The Congress will fight until the last breath Selvap Perunthagai assures