சென்னை – வேலூர் 6 வழிச்சாலை திட்டம்!சென்னை டூ வேலூர் இனி 2 மணி நேரத்தில் போகலாம்! முழு விவரம்!
Chennai to Vellore 6 lane highway project Now you can travel from Chennai to Vellore in 2 hours Full details
சென்னை: தமிழக அரசு, சென்னையிலிருந்து வேலூர் வரை ஆறு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டம், சுமார் 142 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும்.
திட்டத்தின் மதிப்பு சுமார் ரூ.4,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரகடம் அருகே உள்ள சென்னை புறநகர் வெளிவட்டச் சாலையில் (CPRR) தொடங்கி, செய்யாறு சிப்காட் வழியாக, வேலூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை (NH-38) வரை இந்த புதிய சாலை அமைக்கப்பட உள்ளது.
இந்தச் சாலை, ஒரகடம் தொழில்துறை மையம், செய்யாறு சிப்காட் மற்றும் வேலூரில் அமையவிருக்கும் சிப்காட் தொழில் பூங்காவை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காட்டுப்பள்ளி மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்கு சரக்கு போக்குவரத்து எளிதாகும். மேலும், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை (NH-44) மீது காணப்படும் நெரிசலை குறைக்கும் வகையிலும் பயன்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, சென்னையிலிருந்து வேலூருக்கு சாலை வழியாக பயணம் செய்ய மூன்று மணி நேரம் ஆகிறது. புதிய சாலை அமைந்தால், பயண நேரம் ஒரு மணி நேரம் குறைந்து, இரண்டு மணி நேரத்தில் சென்றடைய முடியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது: “இந்த திட்டம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களை நேரடியாக இணைக்கும். தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இது விரைவான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும். இதனால் பொருளாதார நடவடிக்கைகள் வேகமடையும்” என்றனர்.
திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாராகி வருகிறது. அது முடிந்தவுடன் நிதி ஒதுக்கீடு மற்றும் ஒப்பந்ததாரர் தேர்வு போன்ற பணிகள் தொடங்கப்படும். பின்னர் கட்டுமானப் பணிகள் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Chennai to Vellore 6 lane highway project Now you can travel from Chennai to Vellore in 2 hours Full details