பொது மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்; பொருநை அருங்காட்சியகத்திற்கு விரைவில் புறக்காவல் நிலையம்; மாநகர காவல்துறை அறிவிப்பு..!
The city police have announced that an outpost will soon be established at the Porunai Museum
நெல்லை- கன்னியாகுமரி தேசிய நொடுஞ்சாலை ஓரம் பொருநை அருங்காட்சியம் அமைந்துள்ளது.இங்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்யும் வகையில் அருங்காட்சியகத்தில் விரைவில் புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொருநை அருங்காட்சியகமானது நெல்லை, ரெட்டியார்பட்டி இரட்டை மலைப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளதால் ஏராளமான வாகனங்கள் அந்த வழியாக அதிவேகத்தில் சென்று வருகின்றன. அதே நேரத்தில் அந்த பகுதியில் ஏராளமான வாகனங்கள் அருங்காட்சியகத்திற்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிளை சாலைக்கு திரும்புகின்றன.

இதனால் ஏற்படும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே இரண்டு போக்குவரத்து போலீஸ் பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை முறைப்படுத்தி வருகின்றனர். அத்துடன், ஒரு எஸ்ஐ தலைமையிலான போலீஸ் குழுவினர் தினசரி அருங்காட்சியகத்தில் பாதுகாப்பு பணிக்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாலை நேரங்களில் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.இந்நிலையில், அருங்காட்சியகத்துக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு தேவை அதிகரித்துள்ளது. இதனால் அருங்காட்சியகத்தில் புறக்காவல் நிலையம் அமைப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை மாநகர கிழக்கு துணை கமிஷனர் வினோத் சந்தாராம் கூறுகையில்,

''அருங்காட்சியகத்திற்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நிரந்தரமான முறையில் அங்கு ஒரு புறக்காவல் நிலையம் அமைக்கத் திட்டமிட்டு வருகிறோம். விரைவில் அமைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
அத்துடன், தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிகவேகமாக வருவதைத் தவிர்க்க, அருங்காட்சியகப் பகுதியில் பேரிக்கார்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார். மேலும் வாகன ஓட்டிகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் வகையில், 100 மீட்டர் தொலைவிற்கு முன்னதாகவே ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளதோடு, பொதுமக்களின் வசதிக்காக நெல்லை மாநகர காவல்துறை அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.
English Summary
The city police have announced that an outpost will soon be established at the Porunai Museum