பிரம்பு முறியும் வரை மாணவியை கொடூரமாக அடித்த ஆசிரியர்..மாணவிக்கு இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
teacher beat his student
பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்னதான் கட்டுப்பாடுகள் விதித்தாலும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டே தான் இருக்கின்றன. சமீபத்தில் ஒரு ஆசிரியர், மாணவரைப் பிறப்புறுப்பில் அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆதிநாராயணன் என்ற ஆசிரியர் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குப் பாடம் எடுத்து வந்தார். அப்போது, வகுப்பறையில் இருந்த பல மாணவர்கள் புத்தகங்கள் கொண்டு வராததால் பிரம்பை எடுத்து எல்லா மாணவர்களையும் ஆதிநாராயணன் அடித்துள்ளார்.
அதே போல முத்தரசி என்னும் மாணவியையும் அடித்துள்ளார். அப்போது, ஆசிரியரின் கையிலிருந்த பிரம்பு முறிந்து மாணவி முத்தரசி கண்ணின் மீது விழுந்துள்ளது. இதனால் வலியால் துடித்த மாணவி முத்தரசியை ஆசிரியர்கள், பெற்றோருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாணவியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கருவிழி கிழிந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கண் பார்வை திரும்புவது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மாணவி முத்தரசியின் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு விரைந்த பெற்றோர் அறுவை சிகிச்சை செய்யுமாறு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அவரது கண்ணிலிருந்த பிசிரை நீக்கினர். ஆசிரியர் ஆதிநாராயணனின் செயலால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாகக் வழக்குப் பதிவு செய்த கூடங்குளம் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.