வெள்ளக்காடாக மாறிய சீர்காழி.! முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு.!
tamilnadu chief minister visit in seerkazhi
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் முதல் தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
அதிலும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் மட்டும் சுமார் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆறு மணி நேரத்தில் 44 செ.மீ. மழை பெய்துள்ளது.
இதனால், சீர்காழி மற்றும் அதனை சுற்றியுள்ள 32 கிராமங்களில், வெள்ளிநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல், சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோவில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், தையல்நாயகி அம்மன் உடனுறை வைத்தியநாதசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது..
இதற்காக சீர்காழியில் மட்டும் சுமார் ஒன்பது நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்கிறார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, "சமீபத்தில், வடசென்னைப் பகுதிகளில் ஆய்வு செய்த போது, பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை என்று மக்கள் தெரிவித்தனர்.
மேலும், சில பகுதிகளில் எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடிப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதேபோல், இன்று சீர்காழியில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
tamilnadu chief minister visit in seerkazhi