கவர்னரை நெகிழவைத்த தமிழக சட்டசபை...! இரண்டு முறை தேசிய கீதம் இசைக்கப்பட்டதால் ஆளுநர் அர்லேகர் பெருமிதம்...!
Tamil Nadu Assembly Governor Arlekar proud national anthem played twice
தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற அமர்வு பல்வேறு காரணங்களால் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக, அமர்வு தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதையடுத்து தேசியகீதமும் ஒலிக்கப்பட்டது. வழக்கமாக சட்டசபை அமர்வின் நிறைவில் மட்டுமே தேசியகீதம் இசைக்கப்படும் நிலையில், இன்று தொடக்கத்திலும் நிறைவிலும் என இருமுறை தேசியகீதம் ஒலித்தது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
அதேநேரத்தில், வழக்கமாக சில நிகழ்ச்சிகளில் இடம்பெறும் வந்தே மாதரம் பாடல் இன்று இசைக்கப்படாததும் குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது. அண்மையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வந்தே மாதரம் முதலில் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைக்குப் பிறகு, இன்று சட்டசபையில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இடம்பெற்றது கவனிக்கத்தக்க மாற்றமாக அமைந்தது.

இந்நிலையில், இந்த நிகழ்வை வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகக் குறிப்பிட்டு ஆளுநர் அர்லேகர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,"தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் இன்று புதிய அத்தியாயம் தொடங்கிய நாள் என மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஆளுநரின் முழுமையான உரை எந்தவித இடையூறும் இன்றி சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்டது மனநிறைவை அளிக்கிறது.மேலும், சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் நிறைவிலும் தேசியகீதம் இசைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
இது மாநில அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே நல்லிணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பிரதிபலிப்பதோடு, ஜனநாயகத்தின் மாண்பை உயர்த்தும் நிகழ்வாகவும் அமைந்துள்ளது.
ஜனநாயக ஆட்சி என்பது மோதல்களை உருவாக்குவதற்கல்ல; மாறாக, அனைத்து தரப்புகளுக்கும் இடையே இணக்கத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக செயல்பட வேண்டியது அவசியம்.அரசு மற்றும் நிர்வாக அமைப்புகள் பரஸ்பர புரிதலுடன் செயல்பட்டால்தான் மக்களின் நலன் உறுதி செய்யப்படும்.
அந்த நோக்கில் அனைவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கியிருப்பது நம்பிக்கையையும் மனநிறைவையும் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Tamil Nadu Assembly Governor Arlekar proud national anthem played twice