' சாதிவாரி இட ஒதுக்கீடு குறித்து சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது'; பெ.சண்முகம் கூறுவது என்ன..?
P Shanmugam states that the CPIM welcomes the Governor address in the Legislative Assembly
'தவெக அரசின் அடிப்படை கொள்கையாக சாதிவாரி இட ஒதுக்கீடு என்பது ஏற்கத்தக்கதல்ல. அது சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குவதாக அமையும். பொதுவாக, இந்த ஆளுநர் உரையை வரவேற்கிறோம்' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தவெக அரசின் கொள்கை விளக்கமாகவே ஆளுநர் உரையை பார்க்க வேண்டியுள்ளது. ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நிதி பகிர்வை அளித்திட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன் சட்ட வல்லுநர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பது, திசை மாறிச் சென்ற வருவாயை முறையாக அரசின் கருவூலத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கை, வேளாண் விளைபொருட்களுக்கு உரிய லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்தல், போதை பொருள் இல்லாத தமிழ்நாடு, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை போன்ற அறிவிப்புகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
பொதுவாக மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளான பகுதியினர் நலன், தொழில் வளர்ச்சி, கல்வி, மொழிக் கொள்கை ஆகியவை குறித்து கவனம் செலுத்தப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க அம்சம். அதேசமயத்தில், தவெக அரசின் அடிப்படை கொள்கையாக சாதிவாரி இடஒதுக்கீடு என்பது ஏற்கத்தக்கதல்ல. அது சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குவதாக அமையும்.
நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள உதவி பேராசிரியர் மற்றும் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சம். அதேசமயம், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நிரப்பப்படாமல் உள்ள காலி பணியிடங்களையும் நிரப்புவதற்கு அரசு முன்வர வேண்டும்.

மேலும், நீண்ட காலமாக பல்வேறு பெயர்களில் பல்வேறு சம்பள நிலைகளில் நிரந்தரமின்றி தற்போது பணியாற்றிவரும் ஆசிரியர்கள் பணிகளை நிரந்தரப்படுத்துவதற்கும், ஆசிரியர் கல்வி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்குவதற்கும் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து ஏதும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது இந்த பிரிவினரையும் உள்ளடக்கியதாக அந்த நடவடிக்கை இருக்க வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
ஏற்கெனவே உள்ள தொழிற் கொள்கைகளோடு வருங்கால தேவைகளை கருத்தில் கொண்டு புதிய தொழிற் கொள்கை உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னோடியாக நீண்ட நெடுங்காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வரும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசின் சார்பில் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

அரசுத் துறைகளில் தற்போதுள்ள காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது. லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் அரசுப்பணி கனவு மெய்ப்படும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிட்டிருப்பது அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படாதோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்புவதற்கும், தற்போது நிரந்தரப் பணியிடங்களில் உள்ள தினக்கூலி, ஒப்பந்தக் கூலி, வெளி முகமை உள்ளிட்டவர்களையும் பணி நிரந்தரம் செய்திட நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இதேபோன்று, செவிலியர்களையும், தூய்மைப் பணியாளர்களையும் நிரந்தரம் செய்திட அரசு முன்வர வேண்டும். மேலும், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களிலும் நீண்ட காலமாக ஊழியர் பற்றாக்குறை நிலவி வருவதை கருத்தில் கொண்டு அங்குள்ள காலிப் பணியிடங்களையும் நிரப்பிட உரிய அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையில் வெளியிட வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம், கோயில் சொத்துகள் அனைத்தும் அதன் புனிதமான நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவது இந்த அரசால் உறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டிருப்பதற்கு தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். மக்களின் காணிக்கை மற்றும் அரசின் உதவிகளோடுதான் கோயில்கள் நிர்வகிக்கப்படுகின்றன. கோயில்களின் சார்பாக பல கல்வி நிலையங்கள் தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இது குறித்து ஏற்கெனவே பலரும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில், கல்வி போன்ற நோக்கங்களும் புனிதமான நோக்கத்தின் பகுதியாக இருக்கும் என்று வெளிப்படையாக அறிவிப்பது மிகவும் அவசியமாகும். அத்துடன் கோயில் நிலங்களில் குடியிருப்போர், சாகுபடி செய்து வருபவர்களின் நலன்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்ட ஒழுங்கு பராமரிப்பு, ஜனநாயக இயக்கங்களுக்கு அனுமதி வழங்குவது, பட்டியல் சாதி மக்கள் மீதான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துவது போன்றவற்றிலும் இந்த அரசு உரிய கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
பொதுவாக, இந்த ஆளுநர் உரையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதோடு, குறிப்பான மேற்கண்ட பிரச்சினைகள் மீது தவெக அரசு உரிய கவனம் செலுத்தி சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்று நம்புகிறோம்.'' என பெ.சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
P Shanmugam states that the CPIM welcomes the Governor address in the Legislative Assembly