அரசு மருத்துவமனையா...? மரணக் கூடாரமா...? - அலட்சியத்தால் பெண் பலியான விவகாரத்தில் சீமான் கொந்தளிப்பு...!
Government hospital Death tent Seeman turmoil over woman death due negligence
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டம் பால்கரை கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி உயிரிழந்த சம்பவம் குறித்து கடும் வேதனையும் கண்டனமும் பதிவு செய்துள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது,"ராமநாதபுரம் மாவட்டம் பால்கரை கிராமத்தைச் சேர்ந்த சகோதரி தமிழ்ச்செல்வி, மூக்கு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை முறையில் ஏற்பட்ட கடுமையான அலட்சியம் காரணமாக உயிரிழந்த துயரச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

ஒரு அப்பாவி பெண்ணின் உயிர் பறிபோக காரணமான மருத்துவ அலட்சியம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.உயிரைக் காக்க வேண்டிய மருத்துவத் துறை இன்று பல இடங்களில் வணிக நோக்கத்திற்குள் சிக்கித் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், அரசு மருத்துவமனைகளையே முழுமையாக நம்பி சிகிச்சை பெறும் கட்டாய நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில், கோடிக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாப்பை தாங்கி நிற்கும் அரசு மருத்துவமனைகள் மிகுந்த பொறுப்புணர்வுடனும் மனிதநேயத்துடனும் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
ஆனால் நடைமுறையில் பல இடங்களில் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை நோயாளிகள் அவமதிப்பு, அலட்சியம் மற்றும் அக்கறையற்ற அணுகுமுறையை எதிர்கொள்வது வேதனைக்குரியதாக உள்ளது. இந்த கவனக்குறைவும் பொறுப்பின்மையும் தொடர்ச்சியான உயிரிழப்புகளுக்கான முக்கிய காரணமாக மாறியுள்ளது.
எனவே, அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் அலட்சியத்தால் அப்பாவி மக்களின் உயிர்கள் பலியாகும் இத்தகைய துயரச் சம்பவங்கள் இனியும் நிகழாத வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக ஆக்கப்பூர்வமான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், தமிழ்ச்செல்வி உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதோடு, அவரது குடும்பத்தினருக்கு துயர்துடைப்பு நிதியும் உரிய நிவாரணமும் வழங்கி அரசு மனிதநேயப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு சீமான் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Government hospital Death tent Seeman turmoil over woman death due negligence