கட்சித் தாவல் நடவடிக்கை..? உத்தவ் சிவசேனாவின் 06 எம்.பி.க்களுக்கு 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு; சஞ்சய் ராவத் கூறுவது என்ன..?
Y plus security for 6 Uddhav Shiv Sena MPs
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) கட்சியைச் சேர்ந்த 06 எம்.பி.க்கள், இன்று டெல்லியில் நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அக்கட்சி சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், அவர்கள் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியில் இணையவுள்ளமை உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, நாகேஷ் ஆஸ்திகர், சஞ்சய் தேஷ்முக், சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தினா பாட்டீல், ஓம் பிரகாஷ் ராஜேநிம்பல்கர், பாவ்சாகேப் வக் சவ்ரே ஆகிய 06 எம்.பி.க்களும் சிவசேனாவில் இணைவதற்கான கோரிக்கை அடங்கிய கடிதத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சிவசேனா (யுபிடி) கட்சியைச் சேர்ந்த குறித்த ஆறு எம்.பி.க்களும் அணி மாறுவதை உறுதிப்படுத்தும் விதமாக அவர்களுக்கு மகாராஷ்டிர அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளது.
சிவசேனா கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்துக்குப் பின்னர் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;
இன்று நடைபெற்ற கூட்டத்தில் அரவிந்த் சாவந்த், ராஜாபாவ் வாஜே, அனில் தேசாய் ஆகிய மூன்று மக்களவை உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்காத உறுப்பினர்கள் கட்சியின் கொறடா உத்தரவை மீறியுள்ளதாக கூறியுள்ளார். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், அவர்களின் உறுப்பினர் பதவியை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்னமும் அவர்கள் எங்கள் கட்சியின் உறுப்பினர்களாகவே உள்ளனர் என்றும், எங்கள் சின்னத்தில்தான் அவர்கள் வெற்றி பெற்றனர். கொறடா உத்தரவை மீறியதால் அவர்கள் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பாஜக நாட்டின் அரசியலை, குறிப்பாக மகாராஷ்டிர அரசியலை களங்கப்படுத்தியுள்ளது என்று குற்றம் சுமத்தியுள்ளார். ஆகவே அதற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒரு முக்கியமான நபரிடமிருந்து தனக்கு ஓர் அழைப்பு வந்ததாகவும், குறித்த 06 எம்பிக்கும் தலா ரூ.50 கோடி வழங்கப்பட உள்ளதாகவும், முன்பணமாக ரூ.15 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாற்று கட்சியில் இணைய விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்களின் தற்போதைய பதவியை ராஜினமா செய்து விட்டு செல்லட்டும் என்றும் சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Y plus security for 6 Uddhav Shiv Sena MPs