பச்சிளம் குழந்தையைக் கொன்ற சந்தேகப் புத்தி...! தண்ணீரில் அமுக்கி 9 மாதக் குழந்தையைக் கொலை செய்த தந்தை அதிரடி கைது...!
Suspect arrested murdering 9 month old baby by drowning him water
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா வி.ராமசாமிபுரத்தில் 9 மாத பெண் குழந்தையின் மரணம் தொடர்பாக வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் விபத்து மரணமாக கருதப்பட்ட சம்பவம், பின்னர் நடைபெற்ற விசாரணையில் கொலை வழக்காக மாறியுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த பாண்டிதுரை (30) மற்றும் கலைச்செல்வி (27) தம்பதியருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 9 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.கடந்த மாதம் 8-ஆம் தேதி, வீட்டில் இருந்த தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்ததால் 9 மாத குழந்தை உயிரிழந்ததாக கூறி, எவரிடமும் தகவல் தெரிவிக்காமல் குழந்தையின் உடலை அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குழந்தையின் உயிரிழப்பில் சந்தேகத்திற்கிடமான அம்சங்கள் இருப்பதாக விட்டல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா அளித்த புகாரின் பேரில், காவலர்கள் விசாரணையை தொடங்கினர். இதையடுத்து வருவாய்த் துறையினர் முன்னிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் உடல் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியானதும் வழக்கில் திருப்புமுனை ஏற்பட்டது. அதில், குழந்தை தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழக்கவில்லை என்றும், தண்ணீரில் அமுக்கப்பட்டு உயிரிழக்கச் செய்யப்பட்டிருப்பது உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாண்டிதுரை மற்றும் கலைச்செல்வியிடம் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, 9 மாத குழந்தையை தானே தண்ணீர் பாத்திரத்தில் அமுக்கி உயிரிழக்கச் செய்ததாக பாண்டிதுரை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடைபெற்ற விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டிருந்த பாண்டிதுரை, அந்த குழந்தை தனக்குப் பிறந்தது அல்ல என்ற எண்ணத்தில் இருந்து வந்ததாகவும், அதுவே இந்த கொடூரச் செயலுக்கு காரணமாக அமைந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து உண்மை தெரிந்திருந்தும் அதை மறைத்து வைத்ததாக கூறப்படும் கலைச்செல்வியும் வழக்கில் தொடர்புடையவராக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Suspect arrested murdering 9 month old baby by drowning him water