புண்ணியம் தேடப் போய்...அபராதம் கட்டிய கதை...! தாமிரபரணி ஆற்றில் அதிரடி வேட்டை...! - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆக்ஷன்...!
story going search virtue fine Action hunt Thamirabarani river Pollution Control Board action
நெல்லை மாவட்டத்தின் பாபநாசம் கோவில் படித்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார தாமிரபரணி ஆற்றுப்படுகை பகுதிகளில் முன்னோர்களுக்கான திதி, தர்ப்பணம் மற்றும் பரிகார சடங்குகள் செய்ய வரும் பொதுமக்கள், பழைய துணிகள், மறைந்தவர்களின் புகைப்படங்கள் மற்றும் பல்வேறு குப்பைகளை ஆற்றில் வீசி தாமிரபரணியை மாசுபடுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைத்து வந்தனர்.

இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வந்தது.இந்த சூழலில், கடந்த 18ஆம் தேதி பாபநாசம் தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளை சுகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆற்றில் துணிகள் மற்றும் கழிவுப்பொருட்களை வீசுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தீவிர உத்தரவு பிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் மகாதேவன், சுகாதார ஆய்வாளர் ஆறுமுக நயினார் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் இணைந்து கடந்த 18ஆம் தேதி முதல் நேற்று வரை பாபநாசம் தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆற்றில் துணிகள் மற்றும் கழிவுகளை வீசிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, விக்கிரமசிங்கபுரம் பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வில் சுமார் 50 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், விதிமுறைகளை மீறிய கடை உரிமையாளர்களிடமிருந்து ரூ.18 ஆயிரம் அபராதத் தொகையும் வசூலிக்கப்பட்டது.
மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நேற்று சிறப்பு பேரணி நடத்தப்பட்டது.
நகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணி, நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி ரதவீதி வழியாக சென்று மீண்டும் நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது.
English Summary
story going search virtue fine Action hunt Thamirabarani river Pollution Control Board action