தொடரும் இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியம்! சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள்!
SriLanka pirates brutally attack nagai fishermen
நாகப்பட்டினம், செருதூர் பகுதியை சேர்ந்த சக்தி பாலன் என்பவரது படகில் அரி கிருஷ்ணன் (வயது 26), சூரியா (வயது 25) உள்பட 5 மீனவர்கள் நேற்று கடலுக்குள் மீன் பிடிக்க சென்று, கோடியக்கரை அருகே இன்று அதிகாலை நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அதிவேக படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 10க்கும் மேற்பட்டோர் இந்திய எல்லைக்குள் நுழைந்து நாகை மீனவர்களின் படகில் ஏறி 5 மீனவர்களையும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் மீனவர்கள் 5 பேரும் படுகாயம் அடைந்து படகில் சரிந்து விழுந்தனர். பின்னர் இலங்கை கடற்கொள்ளையர்கள் 550 கிலோ வலை, ரூ.50 ஆயிரம் மதிப்புடைய மீன்கள், ஜிபிஎஸ் கருவி, பேட்டரி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இன்று காலை கரைக்கு திரும்பி வந்து மீனவர்கள் நடந்த விவரங்களை உறவினர்களிடம் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த நாகை கடலோர காவல் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த மீனவர்களை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோடியக்கரையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி அவர்களிடம் இருந்த பொருட்களை பறித்து சென்றனர்.
தற்போது மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களை தாக்கிக் கொள்ளையடித்த சம்பவம் மீனவர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
SriLanka pirates brutally attack nagai fishermen