பழைய வண்ணாரப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்...! போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என ஏமாற்றி பணம் பறித்த காவலர் கைது...!
Shocking incident Old Washermanpet Policeman arrested extorting money by pretending to be Narcotics Control Unit officers
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எனக் கூறி கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், கடை உரிமையாளரை மிரட்டி ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல் தலைமையகத்தில் பணியாற்றும் தலைமைக் காவலர் உள்பட 2 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார்.

அவரது கடைக்கு சிலர் திடீரென வந்துள்ளனர். தங்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்ட அவர்கள், கடையில் சோதனை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.பின்னர் பிரவீன் குமாரை மிரட்டிய அந்த நபர்கள், கடையில் இருந்த ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டதுடன், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வருமாறும் அவரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த பிரவீன் குமார், அவர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். இதையடுத்து, தாங்கள் அதிகாரிகள் என்பதை நிரூபிக்க முடியாமல் தடுமாறிய அந்த நபர்கள், எடுத்துச் சென்ற பணத்துடன் அங்கிருந்து அவசரமாக தப்பிச் சென்றுள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த பிரவீன் குமார், உடனடியாக காவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.இதையடுத்து சம்பவம் தொடர்பாக காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கடைக்கு வந்த நபர்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களில் ஒருவர் காவல் தலைமையகத்தில் பணியாற்றும் தலைமைக் காவலர் ரவிவர்மன் என்பது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து ரவிவர்மனை பிடித்து விசாரித்த காவலர்கள், அவருடன் சேர்ந்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக மங்கிலால் என்பவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ரவிவர்மன் மற்றும் மங்கிலால் ஆகிய 2 பேரையும் காவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்ற 2 நபர்கள் யார் என்பது குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Shocking incident Old Washermanpet Policeman arrested extorting money by pretending to be Narcotics Control Unit officers