பணிநீக்கம் மட்டுமே படுகொலை செய்யப்பட்ட அஜித் மரணத்திற்கான நீதியா..? போலீசார் மீது கொலை வழக்கு பதியாதது ஏன்? சீமான் கேள்வி..! - Seithipunal
Seithipunal


திருபுவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் அம்மன் கோவிலில் 10 பவுன் நகை காணாமல் போன வழக்கில் விசாரணைக்காக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித் (29) போலீசாரின் விசாரணையின் போது மயங்கி விழுந்து மரணமானார். இந்நிலையில், அஜித்தின் மரணத்திற்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் அறிக்கை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளதாவது: 

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தம்பி திருபுவனம் அஜித் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்!

 சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக தற்காலிகமாகப் பணியாற்றி வந்த தம்பி அஜித், பக்தர் ஒருவரின் தங்கநகையைத் திருடிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருபுவனம் காவல்துறையினரால் விசாரணைக்கு  அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.
திருபுவனம் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதால் நிகழ்ந்துள்ள இப்படுகொலை வன்மையான கண்டனத்துக்குரியது.

விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதாலேயே தம்பி அஜித் உயிரிழந்ததாகக் கூறி, படுகொலைக்கு நீதி வேண்டி அவருடைய உறவினர்கள் போராட்டம்  நடத்தி வந்த நிலையில், திருபுவனம் காவல்நிலையத்தில் பணியாற்றிய ஆறு தனிப்படை காவலர்களை சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காளிப்பாளர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். காவல்துறை விசாரணையில் நடைபெற்ற படுகொலைக்கு பணியிடை நீக்கம் செய்வது மட்டும்தான் தண்டனையா? பணிநீக்கம் மட்டுமே படுகொலை செய்யப்பட்ட அஜித் மரணத்திற்கான நீதியா? பாதிக்கப்பட்ட அவர் குடும்பத்திற்கான துயர்துடைப்பா?

திருட்டு புகாருக்காக தம்பி அஜித் அவர்களைக் கடுமையாகத் தாக்கி விசாரித்த தமிழ்நாடு காவல்துறை, தம்பி அஜித் அவர்களின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்கு பதியாதது ஏன்? அவர்களைக் கைது செய்து உரிய விசாரணை நடத்தாதது ஏன்? திமுக ஆட்சியில் பாமர மக்களுக்கு ஒரு நீதி? அதிகாரம் படைத்தவர்களுக்கு வேறு நீதியா? இதுதான் திராவிட மாடல் கட்டிக்காக்கும் சமூக நீதியா?

திமுக ஆட்சியில் காவல்துறை விசாரணையின்போது குரலற்ற எளிய மக்கள் கொல்லப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது கொடுங்கோன்மையின் உச்சமாகும். கடந்த 4 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட காவல்துறை விசாரணை மரணங்கள் நடைபெற்றுள்ள நிலையில் அம்மரணங்களுக்கு உரிய நீதி இதுவரை கிடைத்தப்பாடில்லை.

சமத்துவம், சமூகநீதி, திராவிட மாடல் என்றெல்லாம் கூறிவிட்டு, அடிப்படை மனித உரிமையைக் கூடக் காத்திட முடியாத அரசாக திமுக அரசு விளங்குவது வெட்கக்கேடானது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் காவல் நிலைய மரணங்களைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுபோல் வெளியிட்ட அறிவிப்புகள் யாவும், வழக்கம்போல் வெற்று விளம்பர அரசியல் நாடகம் மட்டும்தான் என்பதை, தம்பி அஜித் அவர்களின் படுகொலை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

ஆகவே, தமிழ்நாடு அரசு சிவகங்கை மாவட்டம்,  மடப்புரத்தைச் சேர்ந்த தம்பி அஜித்தை கடுமையாகத் தாக்கி அவரது மரணத்திற்கு காரணமான திருபுவனம் காவலர்கள் மீது உடனடியாகக் கொலை வழக்கு பதிவதோடு,  குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு, எவ்வித அதிகாரக் குறுக்கீடுமற்ற நியாயமான நீதி விசாரணை நடைபெறுவதை உறுதிசெய்து, அவரது உயிரிழப்புக்குக் காரணமான காவலர்கள் அனைவருக்கும் சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

அதோடு, தம்பி அஜித் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், உரிய துயர்துடைப்பு நிதியும் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என்று சீமான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman questions why police did not file murder case in Ajiths death who was taken for questioning


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->