தென்காசி மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க வேண்டும்.. சரத்குமார் வேண்டுகோள்.!! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் (ESIC - Employee State Insurance Corporation) பதிவு செய்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெற்று வரும் நிலையில், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைத்து மக்களுக்கான மருத்துவ பயனை விரிவாக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை முன்வைக்கிறேன்.

100 படுக்கைகளுடன் கூடிய இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க, நகரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் குறைந்தபட்சம் 50,000 பேர் இஎஸ்ஐயில் பதிவு செய்திருக்க வேண்டும் எனவும், நகரத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்திற்குள் மற்றொரு இஎஸ்ஐ மருத்துவமனை இருக்க கூடாது எனவும் விதி அமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் தனியாக பிரிந்தநிலையில், இங்கு செயல்படும் நூற்றுக்கும் மேற்பட்ட பீடி கம்பெனிகளில் பணியாற்றும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பீடி தொழிலாளர்கள் இஎஸ்ஐயில் பதிவு செய்துள்ளனர். எனினும், எளியவர்களுக்கு உதவியாக அமைக்கப்பெற்ற திட்டத்தின் பலனை மக்கள் பல கி.மீ கடந்து சென்று பெறுவது சிரமமான, இயலாத காரியமாக உள்ளது.

ஏற்கெனவே, திருப்பூர் மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை கொண்டுவர 2019 - இல் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இருப்பினும், இன்றுவரை திட்டப்பணிகள் மேற்கொண்டு நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது ஏற்புடையது அல்ல. 

பீடி தொழிலாளர்கள், பின்னலாடை தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களின் நலனை பிரதானமாக கொண்டு கிடப்பில் போடப்பட்ட இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்றவும், தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் இஎஸ்ஐ மருத்துவமனைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசையும், தமிழக அரசையும் கேட்டுக் கொள்கிறேன்..

மேலும், தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான (EPFO - Employees Provident Fund Organization) வட்டி கடந்த மார்ச் மாதம் 8.5% ஆக குறைத்த நிலையில், தற்போது 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாக மீண்டும் குறைத்திருப்பது தொழிலாளர்களின் நம்பிக்கைக்கு முரணானது.

தொழிலாளர்களின் பொருளாதார நலனை உறுதி செய்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உடனடியாக வட்டி குறைப்பு அறிவிப்பை திரும்பப்பெற்று, பழைய வட்டி விகிதத்தையே தொடர வேண்டும் எனவும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sarath kumar statement for ESI hospital


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->