ஆபத்தான குகையில் வசித்து வந்த ரஷிய பெண் மற்றும் அவரது குழந்தைகள் மீட்பு!
Rescue of a Russian woman and her children living in a dangerous cave
கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டத்தில் உள்ள ராமதீர்த்த மலைப்பகுதியில் ஆபத்தான நிலையில் வசித்து வந்த ரஷிய பெண் மற்றும் அவரது இரண்டு சிறுமிகள் போலீசாரால் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோகர்ணா போலீசாருக்கு, ராமதீர்த்த மலைப்பகுதியில் வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர் என்ற தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, போலீசார் மலைப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு குகையின் முன் மனிதர்களின் ஆடைகள் வெயிலில் காயவைக்கப்பட்டிருந்ததை பார்த்த போலீசார், உடனடியாக உள்ளே சென்று சோதனை செய்தனர்.
அப்போது அந்த குகையில் ரஷியாவை சேர்ந்த நீனா குடினா (வயது 40) மற்றும் அவரது இரு பெண் குழந்தைகள் – பிரக்யா (6), அமா (4) ஆகியோர் வசித்து வந்தது தெரியவந்தது. விசாரணையில், நீனா சுற்றுலா விசாவுடன் இந்தியா வந்தது, முதலில் கோவாவில் தங்கியிருந்தார் என்பதும், பின்னர் ஆன்மீக ஈடுபாடால் கோகர்ணா வந்ததும் தெரியவந்தது.
நீனா குடினாவின் விசா ஏற்கனவே காலாவதியானது என்றும்அவர் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதும்,தியானம், யோகா செய்வதற்காக குகையில் தங்கியிருப்பதும் போலீசார் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
மேலும், அவர்களைக் காப்பாற்றிய போலீசார், தற்போது குமட்டா தாலுகா பங்கிகோட்லு கிராமத்தில் உள்ள மடத்தில் தற்காலிகமாக அவர்களை தங்க வைத்துள்ளனர்.விசா விதிமீறல் காரணமாக, நீனா மற்றும் அவரது குழந்தைகளை சொந்த நாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் பெங்களூருவில் உள்ள ரஷிய தூதரகத்துடன் போலீசார் தொடர்பு கொண்டுள்ளனர்.தூதரகம், முதலில் அவர்களை பெங்களூருவுக்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டுள்ளது.அதன்படி, திங்கட்கிழமை (ஜூலை 14) அன்று பெண்ணும் குழந்தைகளும் தூதரகத்துக்கு அனுப்பப்படுவர்.பின்னர், ரஷியாவுக்கு நாடு கடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
Rescue of a Russian woman and her children living in a dangerous cave