திருட்டு சொகுசு கார்களை ஒப்பந்தம் போட்டு உலாவவிட்ட கும்பல்.. இராமேஸ்வரத்தில் பரபரப்பு பின்னணி.!!
Rameswaram car thief gang arrest and police investigation
தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் இயக்கப்படும் வாகனங்கள் முறையான ஆவணத்துடன் இயக்கப்படுகிறதா? அல்லது முறையற்ற ஆவணங்களுடன் இயக்கப்படுகிறதா?.. அவ்வாறு முறையற்ற ஆவணத்துடன் இயக்கப்படும் பட்சத்தில், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனடிப்படையில், வாகன சோதனையானது தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், வழக்கம்போல வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்த காவல் துறையினர், காரில் சீட் பெல்ட் அணியாமல் வந்த விஜய்ரகு என்ற நபருக்கு இ-சலான் முறையில் அபராதம் விதித்துள்ளனர். இந்த அபராதத் தொகையை கணினியில் பதிவேற்றம் செய்த சமயத்தில், கும்மிடிபூண்டி பகுதியைச் சார்ந்த புவனேஸ்வரன் என்பவரது அலைபேசிக்கு அபராத குறுஞ்செய்தி சென்றுள்ளது.
இந்த அபராத குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ள வண்டி எண்ணின் அடிப்படையில், இது தனது மாயமான கார் என்பதை அறிந்து அதிர்ந்து போன புவனேஸ்வரன், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்தியேக எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதில், கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக சினிமா சூட்டிங் என்று கார் வாங்கி சென்று மாயமானதாகவும், சென்னை குமுளிப்பூண்டி காவல் நிலையத்தில் இது தொடர்பாக ஏற்கனவே புகார் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து காரை ஓட்டி வந்த விஜயரகுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு சமயத்தில், ரூ.25 லட்சம் மதிப்புள்ள கார், ரூ.மூன்று லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. விஜய்யிடம் காரை விற்பனை செய்த ஞானசிங் துறையிடம் விசாரணை மேற்கொண்டதில், பல மோசடி சம்பவங்கள் வெளிவந்துள்ளது.
தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சொகுசு கார் வைத்திருக்கும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் சென்று படப்பிடிப்புக்கு வாகனம் தேவைப்படுகிறது. வாடகைக்கு கார் கொடுத்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறி வாகனத்தை முதலில் கைப்பற்றியுள்ளனர். இதன் பின்னர் காரை இராமேஸ்வரத்திற்கு கொண்டு வந்து உள்ளூர் அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்களுக்கு வருடாந்திர வாடகையாக ரூ.3 இலட்சம் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் போடப்பட்டு கார் விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
காரின் உரிமையாளர்கள் காரை திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்றும், ரூ.3 லட்சத்தில் ரூ.30 ஆயிரம் வாடகை போக, மீதி தொகை திருப்பி கொடுக்கப்படும் என்றும் புதிய வியாபாரமே நடந்துள்ளது. சொகுசு கார்களை ரூ.3 லட்சத்திற்கு வாங்கி உள்ளூரில் பெரிய நபர்கள் போல பலரும் வளம் வந்துள்ளதும், சுமார் 100க்கும் மேற்பட்ட நபர்களிடம் இது போல மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக 23 கார்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மோசடி கும்பலை சேர்ந்த ஞானசிங், எடிசன், அஜய் சர்மா, எபினேசர் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இது குறித்த தொடர் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Rameswaram car thief gang arrest and police investigation