இளையராஜாவை நேரில் சந்தித்த வேடன்.. இளையராஜாவுக்கு புதுசா ஒரு பட்டம் கொடுத்திருக்காரு! என்ன தெரியுமா?
The hunter who met Ilayaraja in person has given Ilayaraja a new title Do you know what
மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனித்துவமான ராப் பாடல்களால் கவனம் பெற்றவர் ராப் பாடகர் வேடன். மேடை நிகழ்ச்சிகளில் மட்டும் அல்லாமல், திரைப்படங்களிலும் பாடல்களைப் பாடி தனது அடையாளத்தை உறுதியாக நிலைநிறுத்தியுள்ள அவர், தீபாவளிக்கு வெளியான பைசன் படத்தில் இடம்பெற்ற “ரெக்க ரெக்க” பாடல் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த நிலையில், இன்று (டிசம்பர் 26) வேடன் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்துள்ளார்.
இதுதொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வேடன், அதற்கு “இசை அரக்கன்” என்று கேப்ஷன் இட்டுள்ளார். இளையராஜாவின் அலுவலகத்திற்குச் சென்று பொன்னாடை போர்த்தி மரியாதை செய்த அவர், இசைஞானியுடன் நேரில் பேசிய தருணம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
மலையாளி தந்தை மற்றும் இலங்கைத் தமிழ் தாய்க்குப் பிறந்த வேடனின் இயற்பெயர் ஹிரந்தாஸ் முரளி. சமூகத்தில் நடைபெறும் அநீதிகள், ஒடுக்குமுறைகள் ஆகியவற்றை தனது பாடல்களின் மூலம் கேள்வி எழுப்பி வருபவர். தனது பெயரை “வேடன்” என்று மாற்றிக் கொண்ட அவர், மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் பாடும் திறன் மூலம் இரண்டு மாநிலங்களிலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். தனது நெஞ்சில் தமிழின் முதல் எழுத்தான ‘அ’ உயிரெழுத்தை பச்சைக் குத்திக்கொண்டுள்ள வேடன், தமிழ் குறித்து பேசும்போது “தமிழ் தாய்” என்றே குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.
இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகரான வேடன், அவரை நேரில் சந்தித்தது தனது இசைப் பயணத்தில் ஒரு மறக்க முடியாத தருணம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, இயக்குநர் பா. ரஞ்சித் தலைமையிலான நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் 5ஆம் ஆண்டு “மார்கழியில் மக்களிசை” நிகழ்ச்சியில் பங்கேற்கவே வேடன் சென்னை வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அவர் பாடவுள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் இசைக்கு கிடைக்கும் வரவேற்பும், வேடன் போன்ற கலைஞர்களின் பங்கேற்பும், இந்த ஆண்டு மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக்கியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
The hunter who met Ilayaraja in person has given Ilayaraja a new title Do you know what