ராமநாதபுரத்தில் ஒரு மாணவி, ஒரு ஆசிரியர்! திறக்கப்பட்ட அரசு பள்ளி!
Ramanadhapuram single student govt Schools Reopen
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஒன்றியத்துக்கு உட்பட்ட 112 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் இன்று கோடை விடுமுறைக்கு பிந்தைய முதல் நாளாக திறக்கப்பட்டுள்ளன.
ஆனால், தொண்டி அருகே தளிர்மருங்கூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இன்று ஒரு மாணவிக்காக மட்டுமே திறக்கப்பட்டது.
கடந்த ஆண்டு இந்தப் பள்ளியில் 5-ம் வகுப்பில் ஒரு மாணவன், 2-ம் வகுப்பில் ஒரு மாணவி என இருவரே இருந்தனர். இப்போது அந்த மாணவன் மேல்படிப்புக்கு வேறு பள்ளிக்கு சென்றதால், ஒரே மாணவி மட்டும் 3-ம் வகுப்புக்கு செல்கிறாள்.
இந்தப் பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியரும், ஒரு உதவி ஆசிரியரும் இருந்த நிலையில், கடந்த மாதம் தலைமை ஆசிரியர் ஓய்வு பெற்றார். தற்போது ஒரே உதவி ஆசிரியர்தான் உள்ளார். மாணவர் சேர்க்கை நடைபெறாததால், இன்று ஒரே மாணவிக்காகவே பள்ளி திறந்தது.
மாணவியின் பெற்றோர் கூறியதாவது: “பள்ளி மூடப்படும் அபாயம் இருந்ததால், தனியார் பள்ளியில் படித்து வந்த என் மகளைக் கொண்டு வந்து இங்கே சேர்த்தேன். ஆனால், பேச்சுத்துணையும், விளையாட யாரும் இல்லாததால் அவள் பள்ளிக்கு செல்ல பயப்படுகிறாள்.” என்றார்.
அரசு ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் பேசி புதிய மாணவர்களை சேர்க்க முயற்சிக்க வேண்டும் என்பதே தற்போது எழுந்த கோரிக்கையாகும்.
English Summary
Ramanadhapuram single student govt Schools Reopen