தணிக்கை சிக்கலில் சிக்கிய ‘ஜன நாயகன்’!முதல்வர் விஜய் நடித்த ஜன நாயகன் எப்போ ரிலீஸ்? அடிதூள் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்!
Jana Nayagan in trouble with censorship When will Chief Minister Vijay Jana Nayagan release Producer releases a basic update
தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தணிக்கை சிக்கலால் தாமதமாகியுள்ளதாக தயாரிப்பாளர் கேவி நாராயணா தெரிவித்துள்ளார். இருப்பினும், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் படம் வெளியாகும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் நாராயணா, “ஜன நாயகன் திரைப்படம் கடந்த 2025 டிசம்பரிலேயே மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவான CBFC-க்கு அனுப்பப்பட்டது. படம் பார்த்த தணிக்கை குழு முதலில் U/A 16+ சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் இறுதி சான்றிதழ் வழங்கப்படும் நேரத்தில் திடீரென நடைமுறை நிறுத்தப்பட்டது” என்றார்.
படத்துக்கு எதிராக ஒரு புகார் வந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் படம் மறுபரிசீலனைக் குழுவுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார். வெளியீட்டுக்கு முன்பே இப்படியான எதிர்ப்பு எழுந்தது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து தயாரிப்பு தரப்பு நீதிமன்றத்தை அணுகியதாகவும், படம் வெளியாவதற்கு முன்பே வெளிப்புற புகார்களுக்கு இடமில்லை என வாதிட்டதாகவும் கூறப்படுகிறது. விசாரணையின் போது, முதலில் படத்தை அனுமதிக்க ஒப்புதல் அளித்த பரிசோதனைக்குழு உறுப்பினரே பின்னர் எதிர்ப்பு தெரிவித்தது தெரியவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவே சான்றிதழ் நடைமுறை நீள காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், நடிகர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றிருப்பது படத்தின் மீதான கவனத்தை மேலும் அதிகரித்துள்ளதாக நாராயணா குறிப்பிட்டார். “தளபதி விஜய்” என்பதற்குப் பதிலாக “தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்” என்று தலைப்பில் குறிப்பிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் சிரிப்புடன் பகிர்ந்துகொண்டார்.
தற்போது CBFC உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், தணிக்கை பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் தயாரிப்பாளர் தெரிவித்தார். அனைத்தும் திட்டமிட்டபடி சென்றால், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் படம் திரையரங்குகளில் வெளியாகும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
முதலில் ஜனவரி 9ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த ‘ஜன நாயகன்’ திரைப்படம், தணிக்கை பிரச்சினையால் வெளியீட்டை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், படம் இணையத்தில் கசிந்த சம்பவமும் படக்குழுவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஒரு ஃப்ரீலான்ஸ் அசிஸ்டென்ட் எடிட்டர் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ் சினிமாவில் டிஜிட்டல் திருட்டு பிரச்சினையை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
“பல சவால்களை சந்தித்தாலும், ‘ஜன நாயகன்’ திரைப்படத்தை விரைவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் ஒரே நோக்கம்” என தயாரிப்பாளர் நாராயணா உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
English Summary
Jana Nayagan in trouble with censorship When will Chief Minister Vijay Jana Nayagan release Producer releases a basic update