'அதிமுகவில் எல்லாரையும் ஒருங்கிணைத்து உங்கள் முன் அழைத்துப் பேசும் நாள் மிக விரைவில் வரும்'; சசிகலா பேட்டி..!
Sasikala stated that the day will arrive very soon when she brings everyone in the AIADMK together and presents them before you
நடந்து முடிந்த தமிழக தேர்தலில் அதிமுக கூட்டணி 53 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. அதிமுக தனியாக 47 தொகுதிகளில் வெற்றிப்பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்தக் கட்சிக்குள் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தனிப் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்திருக்கும் தவெகவுக்கு திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் விலகியும் வெளியில் இருந்தும் ஆதரவு கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பெரும்பான்மை நிரூபிக்க இன்று சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
முன்னதாக தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்த முதல்வர் விஜய், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கவில்லை. ஆனால், அக்கட்சியில் தற்போது தனிப் பிரிவாக செயல்பட்டும், தவெகவுக்கு ஆதரவு தருவோம் எனவும் அறிவித்த, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோரையும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களையும் முதலமைச்சர் விஜய் சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவாக சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பிலான எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த எடப்பாடி பழனிசாமி அவர்களின் கட்சிப் பதவிகளை பறித்துள்ளார்.
இந்நிலையில், இன்று அ.இ.பு.த.ம.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்து உரையாற்றுகையில் கூறியதாவது;
எல்லோரும் ஒருங்கிணைந்தால் நிச்சயம் வாய்ப்புள்ளது. நல்ல மனிதன் நல்ல மனதோடு ஏழைகளுக்கு என ஆரம்பித்த இயக்கம் இது. என்றைக்கும் துண்டாக போகாது என்றும், ஒன்றாகத்தான் இருக்கும். யார் முயற்சித்தாலும் இது நடக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அதிமுகவின் ஒருங்கிணைப்புக்கு நான் பெரும் முயற்சி எடுத்தேன். ஆனால், ஒருவரின் பிடிவாதத்தால் அது நடக்கவில்லை என்றும், இன்று அது இல்லாத சூழல் உருவாகியுள்ளது. எனவே அனைவரும் மனதை வைத்து இதனை செய்ய வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எல்லாரையும் ஒருங்கிணைத்து உங்கள் அனைவரையும் அழைத்துப் பேசும் நாள் மிக விரைவில் வரும் என்றும், எங்கள் இயக்கம் எப்படி எப்படியோ போகும். கடைசியில் சரியான பாதையில் வந்து நிற்கும். கவலையே படாதீர்கள் என செய்தியாளர்களிடம் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Sasikala stated that the day will arrive very soon when she brings everyone in the AIADMK together and presents them before you