FCRA திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப மத்திய அரசு முன்மொழிவு..!
Central government proposes to send FCRA Amendment Bill to Parliamentary Select Committee
வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எஃப்சிஆர்ஏ (FCRA) மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு (JPC) அனுப்புவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இன்று முன்மொழிந்தது.
இது தொடர்பான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்மொழிவார் என மக்களவையின் துணை அலுவல் பட்டியல் தெரிவிக்கபட்டது. அதன்படி, இன்று இது குறித்து மக்களவையின் அலுவல் பட்டியலில் வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா (எப்சிஆர்ஏ), மக்களவை சபாநாயகரால் நியமிக்கப்படவுள்ள இந்த அவையின் 21 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையின் தலைவரால் நியமிக்கப்படவுள்ள மாநிலங்களவையின் 10 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு அவைக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும்.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் கூட்டத்தை நடத்துவதற்குத் தேவையான குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை, அக்குழுவின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காக இருக்கும். இக்குழு 2026-ஆம் ஆண்டின் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளுக்குள் இச்சபைக்குத் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மற்றபடி, நாடாளுமன்றக் குழுக்கள் தொடர்பான இந்த அவையின் நடைமுறை மற்றும் அலுவல் விதிகள், சபாநாயகர் செய்யும் மாறுபாடுகள் மற்றும் மாற்றங்களுடன் பொருந்தும். மேலும், மாநிலங்களவை அந்தக் கூட்டுக் குழுவில் இணைந்து, அக்குழுவுக்கு மாநிலங்களவையால் நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் பெயர்களை இந்த அவைக்குத் தெரிவிக்க வேண்டும் என்று இந்த அவை மாநிலங்களவைக்குப் பரிந்துரைக்கிறது'' என்று அலுவல் பட்டியல் கூறுகிறது.

வெளிநாடுகளில் இருந்து இந்திய தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் நன்கொடைகளை வரன்முறைப்படுத்த வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா (எஃப்சிஆர்ஏ) கடந்த மார்ச் மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த சில கட்சிகளும் மசோதா குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Central government proposes to send FCRA Amendment Bill to Parliamentary Select Committee