வதந்திகளுக்கு முடிவு...! புதுச்சேரியில் பெட்ரோல், டீசல், கியாஸ் பற்றாக்குறை இல்லை...! - அரசு விளக்கம்
Putting End Rumors No Shortage Petrol Diesel or Gas Puducherry Government Clarification
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் பற்றாக்குறை இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எண்ணெய் நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட உயர்மட்ட ஆலோசனையில் எரிபொருள் மற்றும் சிலிண்டர் விநியோகத்தில் எந்த தடையும் ஏற்படாது என்று உறுதி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவு கையிருப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விநியோகத்தை கண்காணிக்க மாநிலம், மாவட்டம் மற்றும் பிராந்திய மட்டங்களில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுக்கள் எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து புதுச்சேரி முழுவதும் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றன.
கியாஸ் சிலிண்டர்கள் வீட்டு பயன்பாட்டிற்கே பயன்படுத்த வேண்டும் என்றும், அவற்றை வணிக அல்லது தொழில் நோக்கங்களுக்காக பயன்படுத்தினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அவசரமாக அதிக அளவில் வாங்காமல், தேவையான அளவில் மட்டுமே எரிபொருள் மற்றும் சிலிண்டர்களை வாங்க வேண்டும் என்றும், அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அத்தியாவசிய எரிபொருட்கள் போதுமான அளவில் இருப்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
English Summary
Putting End Rumors No Shortage Petrol Diesel or Gas Puducherry Government Clarification