'டபுள் லாபம் தருவதாக ஆசை வார்த்தை'..! - பங்குச்சந்தை பெயரில் ரூ.7.50 லட்சத்தை சுருட்டிய 'ஆன்லைன்' மோசடி கும்பல்...!
promise double profits Online fraud gang that embezzled 7point50 lakhs name stock market
பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் குறுகிய காலத்திலேயே பணம் இரட்டிப்பாகும் என ஆசைவார்த்தை கூறி, ஈரோட்டைச் சேர்ந்த வாலிபரிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்த மர்மநபர்களை சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.ஈரோடு அத்தப்பம்பாளையத்தைச் சேர்ந்த 35 வயது வாலிபருக்கு சமூக வலைதளம் மூலம் பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். பங்குச்சந்தையில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், முதலீடு செய்வதற்காக ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.அந்த பெண்ணின் பேச்சை நம்பிய வாலிபர், முதற்கட்டமாக ரூ.10 ஆயிரத்தை அந்த செயலி மூலம் முதலீடு செய்துள்ளார். சிறிது காலத்திலேயே முதலீட்டுத் தொகையுடன் லாபத்தையும் சேர்த்து பணம் திரும்பக் கிடைத்துள்ளது. இதனால் நம்பிக்கை அடைந்த அவர், தொடர்ந்து அதிக தொகையை முதலீடு செய்யத் தொடங்கியுள்ளார்.
கடந்த மாதம் 1-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.7 லட்சத்து 95 ஆயிரத்தை வாலிபர் முதலீடு செய்துள்ளார். ஆனால், அவருக்கு ரூ.45 ஆயிரம் மட்டுமே திரும்பக் கிடைத்துள்ளது. மீதமுள்ள பெரும் தொகை கிடைக்காததால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த செயலி மூலம் பணத்தைப் பெற முயன்றபோது, திடீரென செயலி முடங்கியுள்ளது. தொடர்பு கொண்ட நபர்களையும் அணுக முடியாததால், தான் ஏமாற்றப்பட்டிருப்பதை வாலிபர் உணர்ந்துள்ளார்.இதைத்தொடர்ந்து ஈரோடு சைபர் குற்றப்பிரிவு காவலர்களிடம் அவர் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.வாலிபரை தொடர்பு கொண்ட பெண் யார், அவருடன் தொடர்புடையவர்கள் யார், பணம் எந்தெந்த வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது என்பது குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மோசடியில் ஈடுபட்ட மர்மநபர்களை கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
English Summary
promise double profits Online fraud gang that embezzled 7point50 lakhs name stock market