கிருஷ்ணகிரி || வீட்டில் பிரசவம் பார்த்ததால் கர்ப்பிணி பெண் பலி.!
pregnent lady died in krishnagiri for house delivery
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, ஊத்தங்கரை அடுத்த சாவடியூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். ஜேசிபி ஆபரேட்டரான இவருக்கும், எலவம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹேமலதா என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு வயதில் மெய்யழகன் என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில், தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஹேமலதா பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். அதன் படி அவருக்கு நேற்று காலை எதிர்பாராதவிதமாக பிரசவ வலி ஏற்பட்டது. இத்தகினால், அவரது குடும்பத்தினர் ஹேமலதாவை திருப்பத்தூர் மாவட்டம் கொரட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரசவ வலி ஏற்பட்டுள்ளதால் உடனடியாக மருத்துவமனையில் சேருமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் இதை கேட்காமல் ஹேமலதாவின் குடும்பத்தினர் அவரை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர்.
அடுத்த சில மணி நேரங்களில் ஹேமலதாவிற்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், உறவினர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் படி, சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து ஹேமலதா மற்றும் குழந்தையை மீட்டு குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஹேமலதாவிற்கு அதிக ரத்தப்போக்கு இருப்பதால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
pregnent lady died in krishnagiri for house delivery