பொங்கல் பரிசு தொகுப்பு.. பொதுமக்களுக்கு அதிர்ச்சி..!!
pongal gift issue
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு, சமீபத்தில் சென்னையில் தொடங்கி வைத்தார்.
21 பொருட்கள் அடங்கிய தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், கருப்பு மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது டோக்கன் அடிப்படையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 பேர் வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. டோக்கன் வாங்க தவறியவர்கள் மற்றும் அதில் உள்ள தேதியில் பொருட்களை வாங்க முடியாதவர்கள் வரும் 10ஆம் தேதிக்கு மேல் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில், ஒரு சில பொருட்கள் தரமற்ற நிலையில் இருப்பதாக குடும்ப அட்டைதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பொருட்கள் எடை குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஏலக்காய், முந்திரி போன்ற பொருட்களின் எடை சரியாக இல்லை என்றும், 21 பொருட்களுக்கு மாறாக 18 பொருட்கள் உள்ளதாக குடும்ப அட்டைதாரர்கள் தெரிவித்துள்ளனர். கோதுமை, மைதா போன்ற பொருட்களில் வண்டு இருப்பதாகவும், வெள்ளம் தரமற்ற நிலையில் உள்ளது என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.