என்.எல்.சி-யை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம்.. மாவட்ட ஆட்சியர் முக்கிய உத்தரவு.!
PMK protest against NLC today in Cuddalore
கடந்த 2006-ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் கையகப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலங்களை, தமிழ்நாடு அரசு உதவியுடன் என்.எல்.சி நிறுவனம் சமன்படுத்தி தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் பணியை நேற்று முன்தினம் தொடங்கியது.
இரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களின் தலைமையில் சுமார் 200-க்கும் கூடுதலான காவலர்களை அந்த பகுதியில் குவித்து, கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசும் வஜ்ரா ஊர்தி, தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் ஊர்திகளையும் போலீசார் கொண்டு வந்து, சாலைகளை தடுத்து, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு சிறைபடுத்தப்படுத்தி நிலங்கள் கையகப்படுத்தும் பணி அரங்கேறியது.
மக்களுக்கு ஆதரவாக களமிறங்கி போராட வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்துனர்.
இந்த அராஜக நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ள பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ், என்எல்சி மற்றும் தமிழக அரசின் அடக்குமுறையை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் இன்று (11-ஆம் தேதி) பா.ம.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் அறிவித்தார்.
பாமகவின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அமைப்பினரும், விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அங்கு 100 சதவீத அரசு பேருந்துகளும், 50 சதவீதம் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும் கடைகள், ஹோட்டல்கள் மற்றும் வாகனங்களை இயக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் அறிவித்துள்ளார்.
மேலும், முழு அடைப்பு போராட்டத்துக்கான அழைப்பையொட்டி கடலூரில் 7000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
English Summary
PMK protest against NLC today in Cuddalore