ஊழல் வழக்கில் சிக்கியவர் சி.பி.சி.ஐ.டி விசாரணை அதிகாரி.. கடலூர் கோவிந்தராசு கொலை வழக்கில், டாக்டர் இராமதாஸ் பரபரப்பு ட்விட்.!
PMK Dr Ramadoss Angry about CBCID Investigation Officer for Cuddalore Govindarasu Murder Case
ஊழல் வழக்கில் சிக்கிய அதிகாரியை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மருத்துவர் இராமதாஸ், கடலூர் முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கை துணை கண்காணிப்பாளர் நிலை அதிகாரி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தை சார்ந்த முந்திரி ஆலை கூலித்தொழிலாளி கோவிந்தராசு, அவர் பணியாற்றி வரும் முந்திரி ஆலையில் வைத்து கடலூர் திமுக எம்.பி ரமேஷ் மற்றும் அவரது உதவியாளர், ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. கோவிந்தராசு தற்கொலை செய்துகொண்டதாக முந்திரி ஆலை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டாலும், அவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக பிற தொழிலாளர்கள் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினார்.
மேலும், கோவிந்தராசுவின் உடலில் அடித்து கொலை செய்யப்பட்டதற்கான காயமும் இருக்கவே, பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கட்சி தலைமை சார்பில் கொலை செய்யப்பட்ட கோவிந்தராசுவின் மரணத்திற்கு நீதி கேட்டு, வழக்கு விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றக்கூறி போராட்டம் நடத்தப்பட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. கோவிந்தராசுவின் உடல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " கடலூர் எம்.பி. முந்திரி ஆலையில் கோவிந்தராசு என்ற தொழிலாளி உடல் முழுக்க காயங்களுடன் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக கடலூர் எம்.பி. ரமேஷ் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது!
ஆனால், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஆய்வாளர் தீபா பல்வேறு ஊழல் புகார்களுக்கு உள்ளானவர் என்றும், இந்த வழக்கில் நீதி கிடைப்பதை தடுக்கவும், எதிரிகளை காப்பாற்றவும் தான் அவர் நியமிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
உள்ளூர் காவல்துறை விசாரித்தால் நீதி கிடைக்காது என்பதால் தான் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் சிபிசிஐடி விசாரணைக்கு ஆணையிடுவதில் தவறில்லை. ஆனால், நேர்மையான அதிகாரியை நியமிக்க வேண்டும்!
கடலூர் எம்.பி. முந்திரி ஆலை மர்மச்சாவு வழக்கில் துணை கண்காணிப்பாளர் நிலை அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும். கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் விசாரணை நடக்க வேண்டும். உயர்நீதிமன்ற ஒப்புதலுடன் இரு அதிகாரிகளும் நியமிக்கப்பட வேண்டும்! " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
PMK Dr Ramadoss Angry about CBCID Investigation Officer for Cuddalore Govindarasu Murder Case