07 வது நாளாக சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் குழந்தைகளுடன் அமர்ந்து போராட்டம்; குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்..!
The protest by secondary school teachers in Chennai continues for the 7th day
அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எழிலகம், வட்டார கல்வி அலுவலகம் என, அரசு துறை அலுவலகங்களில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புத்தாண்டு தினமான இன்றும், ஏழாவது நாளாகவும், இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினர். இவர்கள் சென்னை எழும்பூரில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு, காந்தி இர்வின் சாலை மேம்பாலத்தில், குழந்தைகளுடன் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

போராட்ட காரர்கள் சாலையில் மண்டியிட்டும், தோப்புக்கரணம் போட்டும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை, போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்துள்ளனர். அதில், பலருக்கு காயம் ஏற்பட்டதாகவும், மயக்கம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலர் ராபர்ட் கூறியதாவது: எங்களுக்கான ஊதிய முரண்பாடு எப்போது களையப்படுகிறதோ, அப்போதுதான், எங்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டம் என்றும், எங்கள் புத்தாண்டு சிறையில் தான். கோரிக்கை நிறைவேறாமல், நாங்கள் திரும்ப செல்ல மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசு ஆசிரியர்களுக்கான அடிப்படை ஊதியத்தை பறிப்பதால், இனி தகுதியான ஆசிரியர்கள் இந்த பணிக்கு வர தயங்குவர் என்றும், இதனால், அரசு பள்ளி மாணவர்கள் மிகுந்த பாதிப்பை சந்திப்பர் என்றும் கூறியுள்ளார். மேலும், இத்தனை நாட்கள் போராட்டம் நடத்தியும், எங்களை பேச்சுக்கு அழைக்காமல், அரசு மவுனம் காக்கிறதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
English Summary
The protest by secondary school teachers in Chennai continues for the 7th day