என்ன உண்மையான பிச்சைக்காரன்னு நினைச்சு திட்டிட்டாங்க! நான் கடவுள் படம் குறித்து சிங்கம்புலி பகிர்ந்த அதிர்ச்சித் தகவல்!
I became one of the beggars They thought I was a beggar and scolded me The shocking information shared by the lion
காமெடி நடிகர், இயக்குநர், உதவி இயக்குநர் என பல திறமைகளைக் கொண்டவர் சிங்கம்புலி. பல திரைப்படங்களில் நடித்ததுடன் சில படங்களை இயக்கிய அனுபவமும் அவருக்கு உண்டு. ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தில் இடம்பெற்ற “சோறு சோறு குழம்பு குழம்பு” என்ற டயலாக் மூலம் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரிடமும் அவர் தனித்த அடையாளம் பெற்றார். அதேபோல் ‘தேசிங்கு ராஜா’ உள்ளிட்ட படங்களில் அவரது நகைச்சுவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், தனது உண்மையான நடிப்பு அனுபவம் குறித்து சிங்கம்புலி சமீபத்தில் பகிர்ந்துள்ள தகவல்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. இயக்குநர் பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ படத்தில் சிங்கம்புலி உதவி இயக்குநராகவும் பணியாற்றியதுடன், அதே படத்தில் ஒரு பிச்சைக்காரன் வேடத்திலும் நடித்திருந்தார். இந்தப் படத்தில் பிச்சைக்காரர்களின் வாழ்க்கை உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக, தென் மாவட்டங்களில் உள்ள கோயில்களிலிருந்து உண்மையான பிச்சைக்காரர்களை அழைத்து பாலா சுமார் 30 பேரை தேர்வு செய்ததாக அவர் தெரிவித்தார்.
அந்த அனுபவத்தை நினைவுகூர்ந்த சிங்கம்புலி, “பிச்சைக்காரர்களுடன் இணைந்து நடித்தேன். நான் உதவி இயக்குநராக மைக்கை வைத்து ‘இங்க போ, அங்க போ’ என்று சொல்லும்போது, ஒரு பிச்சைக்கார பெண் ‘நீ யார் எங்களை வேலை வாங்குறதுக்கு?’ என்று கேட்டார். நான் ‘நான் அசிஸ்டன்ட் டைரக்டர், நான் சொல்வதை கேள்’ என்றேன். அதற்கு அந்த பெண் ‘நீ எந்த கோயிலில் இருந்து வந்த?’ என்று கேட்டார்” என கூறினார்.
அந்த நேரத்தில் தன்னை உண்மையான பிச்சைக்காரனாகவே அந்த பெண் நினைத்ததற்கு காரணம், மூன்று ஆண்டுகளாக துவைக்காத உடை, துர்நாற்றம் மற்றும் மூன்று வருடங்களாக சேவிங் செய்யாமல் வளர்த்த தாடி என அவர் விளக்கினார். “அந்த அளவுக்கு நான் அவர்களுள் ஒருவனாகவே மாறியிருந்தேன்” என்றும் சிங்கம்புலி கூறினார்.
‘நான் கடவுள்’ படம் அகோரிகள், ஊனமுற்றோர், பிணங்களைச் சுடும் காவலாளிகள் போன்ற சமூகத்தின் ஒதுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை வலிகளை உணர்ச்சிபூர்வமாக சொல்லும் படமாக அமைந்தது. அந்தப் படத்தில் சாமியார் வேடத்தில் நடித்த இரண்டு பேர் பாலாவிடம் திட்டம் வாங்கிய பின்னர் நடிக்க மறுத்து சென்ற சம்பவத்தையும் சிங்கம்புலி நினைவுகூரினார். பின்னர் அவர்கள் ஒரு திரையரங்கில் ஆங்கிலப் படம் பார்த்துக் கொண்டிருந்ததை கண்டுபிடித்து, “நீங்கள் நடித்தால் நல்ல பேர், சம்பளம் கிடைக்கும்” என்று சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வந்து நடிக்க வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த அனுபவங்கள், சிங்கம்புலியின் நடிப்பு மட்டுமல்லாமல், சினிமாவை அவர் எவ்வளவு ஆழமாக உணர்ந்து வாழ்கிறார் என்பதையும் வெளிப்படுத்துகின்றன.
English Summary
I became one of the beggars They thought I was a beggar and scolded me The shocking information shared by the lion