தமிழகத்தில் புதிய மாவட்டங்கள்! தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுகவிற்கு கடைசி வாய்ப்பு!
PMK Anbumani Ramadoss TN New District DMK Govt MK Stalin
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீடுகள் பட்டியல் தயாரிப்பு 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ள நிலையில், காவல் நிலையங்கள், வட்டங்கள் தொடங்கி மாவட்டங்கள் வரையிலான எல்லைகளை திசம்பர் 31-ஆம் தேதிக்குள் இறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளை இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தலைமைப்பதிவாளர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது. அதாவது, புதிய மாவட்டங்கள், வட்டங்களை அமைப்பதாக இருந்தால், நடப்பாண்டிற்குள் செய்து முடிக்க வேண்டும் என்பது தான் அதன் பொருள் ஆகும்.
2025-ஆம் ஆண்டு திசம்பர் மாதத்திற்குள் புதிய மாவட்டங்களும், வட்டங்களும் அமைக்கப்படவில்லை என்றால், மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் முழுமையான முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அவற்றை செய்ய முடியாது. அதன்படி, நடப்பு திமுக ஆட்சியில் புதிய மாவட்டங்களை அமைப்பதற்கு இது தான் கடைசி வாய்ப்பு ஆகும்.
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் (வாக்குறுதி எண் 380) என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தேர்தல் பரப்புரையின் போது தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து கும்பகோணம் மாவட்டம் அமைக்கப்படும்; திண்டுக்கல் மாவட்டத்தைத் பிரித்து பழனி மாவட்டம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். கடலூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒரே ஒரு புதிய மாவட்டம் கூட ஏற்படுத்தப்படவில்லை.
தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 90% வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு, புதிய மாவட்டங்கள் தொடர்பான வாக்குறுதியையும் இன்னும் நிறைவேற்றவில்லை. புதிய மாவட்டங்களை அமைப்பதற்கு செலவுகள் எதுவும் கிடையாது. புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் கூட, அவை இருக்கும் பணியாளர்களைக் கொண்டு தான் நிரப்பப்படவுள்ளன. ஆனாலும், புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு என்ன தடை? என்று தெரியவில்லை.
பெரிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கான அரசின் சேவைகளை பெற நீண்ட தூரம் அலைய வேண்டியிருக்கிறது. அதற்கு முடிவு கட்ட பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை அமைப்பது மட்டும் தான் தீர்வு. எனவே, சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் வரும் திசம்பர் மாதத்திற்குள் புதிய மாவட்டங்களை அமைத்து முடிக்க வேண்டும்; அதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss TN New District DMK Govt MK Stalin