சோழவந்தானில் நள்ளிரவில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: தீக்காயத்துடன் தப்பிய மர்ம நபருக்கு வலைவீச்சு!
Petrol Bomb Hurled at House in Sholavandan Fleeing Suspect Catches Fire on CCTV
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள பிரதான சாலையில், காமராஜர் நடுநிலைப் பள்ளிக்கு எதிரே அமைந்துள்ள குடியிருப்புத் தெருவில் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. வழக்கம்போல் இரவுப் பணிகளை முடித்துவிட்டு அப்பகுதி மக்கள் வீடுகளைப் பூட்டி உறங்கச் சென்ற நிலையில், இன்று அதிகாலை வேளையில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், தெருவின் முன்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுவரைக் குறிவைத்து அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினார்.
அடர்ந்த தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் வெடிச்சத்தம் கேட்டு அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். அப்போது வீட்டின் சுவரிலும், சிதறிய எரிபொருளால் தரையிலும் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றிலும் லேசாகத் தீ பற்றியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகத் தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்து, பெரும் அசம்பாவிதத்தைத் தடுத்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த சோழவந்தான் காவல்துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை விரிவாக ஆய்வு செய்தனர். அதில், பெட்ரோல் குண்டை வீசியபோது எதிர்பாராதவிதமாக அத்தீ மர்ம நபரின் தலையிலும் பற்றியது. தலையில் தீப்பற்றி எறிந்த நிலையிலேயே அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய அதிர்ச்சி காட்சிகள் கேமராவில் பதிவாகியிருப்பது தெரியவந்தது.
இத்தாக்குதல் முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பெட்ரோல் பங்குகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, கேன்களில் பெட்ரோல் வாங்கிச் சென்ற நபர்களைக் கண்டறியும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். சோழவந்தான் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாகப் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Petrol Bomb Hurled at House in Sholavandan Fleeing Suspect Catches Fire on CCTV