நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி பண்ணைக் கொள்முதல் விலை ரூ.95 ஆக சரிவு: சில்லறை விற்பனை விலையில் மாற்றமில்லை!
Broiler Farmgate Prices Plummet to 95 in Namakkal Zone Despite High Retail Rates
நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம், கரூர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய நாமக்கல் மண்டலம், நாட்டின் முக்கியக் கறிக்கோழி மற்றும் முட்டை உற்பத்தி மையமாகத் திகழ்ந்து வருகிறது. இப்பகுதியில் இயங்கி வரும் 1,000-க்கும் மேற்பட்ட கறிக்கோழிப் பண்ணைகள் மூலம் நாள்தோறும் 30 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
பல்லடத்தில் நிர்ணயிக்கப்படும் விலையின் அடிப்படையில், இங்கு உற்பத்தியாகும் கோழிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களுக்கும் தினமும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகக் கறிக்கோழியின் பண்ணைக் கொள்முதல் விலையில் தொடர் சரிவு காணப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி ஒரு கிலோ ரூ.112 ஆக இருந்த பண்ணைக் கொள்முதல் விலை, படிப்படியாகச் சரிந்து தற்போது ஒரு கிலோ ரூ.95 என்ற அளவை எட்டியுள்ளது. இருப்பினும், பண்ணைக் கொள்முதல் விலை ரூ.17 வரை கணிசமாகக் குறைந்த போதிலும், வெளிச்சந்தையில் சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ கோழி இறைச்சி இன்னமும் ரூ.250 என்ற உயர்ந்த விலையிலேயே விற்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், முட்டைக் கோழி மற்றும் முட்டை விலையில் கடந்த சில நாட்களாக எந்தவித மாற்றமும் இன்றி ஸ்திரத்தன்மை நிலவி வருகிறது. அதன்படி, முட்டைக் கோழியின் பண்ணை விலை ஒரு கிலோ ரூ.120 என்ற அளவிலும், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 520 காசுகளாகவும் (ரூ.5.20) தொடர்ந்து நீடித்து வருகிறது.
பண்ணைக் கொள்முதல் விலை வீழ்ச்சியால் கறிக்கோழி வளர்ப்புப் பண்ணையாளர்கள் உற்பத்திச் செலவைக் கூட எடுக்க முடியாமல் சிரமத்தைச் சந்தித்து வரும் வேளையில், அதன் பலன் நுகர்வோரைச் சென்றடையாமல் இடைத்தரகர்களும் சில்லறை விற்பனையாளர்களுமே அதிக லாபம் ஈட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, வெளிச்சந்தையில் சில்லறை விலையைக் கட்டுப்படுத்தச் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் நுகர்வோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Broiler Farmgate Prices Plummet to 95 in Namakkal Zone Despite High Retail Rates