ஞானசேகரன் மீதான பாலியல் வழக்கு: அண்ணாமலையை விசாரிக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் மனு..!
Petition in the High Court seeking an investigation into Annamalai in the Gnanasekaran sexual assault case
கடந்த ஜனவரி 23-ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்மீது வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பில் சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரிக்க 03 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அமைத்தது. அதில், அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 03 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் ஞானசேகரன் பிரதான குற்றவாளியாக உறுதி செய்யப்பட்டது.
அத்துடன், ஞானசேகரன் மீது 11 குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு, கடந்த மே 28ம் தேதி, சென்னை மகளிர் நீதிமன்றம் அவருக்கு குறைந்தது 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.90,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில், ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக அண்ணாமலை பல பேட்டிகளில் கூறியிருந்தார். அந்த பேட்டியை அடிப்படையாக கொண்டு அவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவுக்கு வலியுறுத்தியதாகவும், ஆனால், இதுவரை அவரிடம் விசாரணை நடத்தவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தற்போது, அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ரவி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Petition in the High Court seeking an investigation into Annamalai in the Gnanasekaran sexual assault case