சொந்த ஊர் செல்லத் துடிக்கும் மக்கள்... கல்லா கட்டும் விமான நிறுவனங்கள்...! - விமான டிக்கெட் விலையைக் கண்டு மிரளும் தமிழக வாக்காளர்கள்...!
People eager go their hometowns Airlines building wall Tamil Nadu voters shocked by price air tickets
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் விரிவான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலில் சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக உரிமையை பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழலில், வெளிநாடுகளில் பணிபுரிந்து வந்த தமிழகத்தை சேர்ந்த பலர் குழுக்களாகவும், தனித்தனியாகவும் விமானங்கள் மூலம் தாயகத்திற்குத் திரும்பி வருகின்றனர். அதேபோல், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசித்து வந்த பணியாளர்கள், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கூட நேற்று முதலே தங்கள் சொந்த ஊர்களை நோக்கி பெருமளவில் புறப்பட்டுள்ளனர்.
பேருந்துகள், ரெயில்கள், தனியார் வாகனங்கள் என எல்லா போக்குவரத்து வழிகளிலும் பயணிகள் அலைமோதும் நிலை உருவாகியுள்ளது. முக்கிய ரெயில்களில் பெரும்பாலான டிக்கெட்டுகள் முன்பதிவாகவே தீர்ந்துவிட்டதால், பலர் மாற்று வழியாக விமானப் பயணத்தை தேர்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.
இதன் தாக்கமாக, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் விமானக் கட்டணங்கள் திடீரென உயர்ந்துள்ளன. சாதாரண நாட்களில் ரூ.5,354 ஆக இருந்த சென்னை-தூத்துக்குடி கட்டணம், தற்போது ரூ.17,527 வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல், சென்னை–மதுரை பயணம் ரூ.13,320, சென்னை-திருச்சி ரூ.14,237 மற்றும் சென்னை-கோவை ரூ.12,027 ஆக அதிகரித்துள்ளது.
விமான டிக்கெட்டுகளும் வேகமாக நிரம்பி வருவதால், கடைசி நேரத்தில் பயணம் திட்டமிடும் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தேர்தல் களத்தில் வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வம், போக்குவரத்து துறையில் பெரும் நெரிசலையும் கட்டண உயர்வையும் உருவாக்கியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
People eager go their hometowns Airlines building wall Tamil Nadu voters shocked by price air tickets