ஆம்பூர் அருகே அதிர்ச்சி; நள்ளிரவில் மனைவி கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு கொடூர கணவன் தலைமறைவு; போலீசார் தேடுதல் வேட்டை..!
A brutal husband absconded after strangling his wife near Ambur
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதி சேர்ந்தவர் பாபு (35). இவர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஹாலோபிளாக் தயாரிப்பு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீதேவி 34 வயது. இவர்களுக்கு ஒரு மகள், 02 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மனைவி தேவியின் நடத்தை மீது பாபுவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் வீட்டில் மனைவியிடம் பாபு, அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். தொடர்ந்து தகராறு ஏற்படுவதால் மனைவி ஸ்ரீதேவி , சில மாதங்களுக்கு முன்பு, அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.
இதனால் மாமியார் வீட்டிற்கு பாபு பலமுறை சென்று மனைவியை தனது வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். ஆனால் அவர் பாபுவுடன் வர மறுத்துள்ளார். அந்த வகையில் சம்பவ தினமாக நேற்று முன்தினம், மீண்டும் மாமியார் வீட்டிற்கு சென்ற பாபு, மனைவி ஸ்ரீதேவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இரவு உணவுக்கு பின்னர் குழந்தைகள் 03 பேரும் வீட்டின் மாடியில் தூங்கச் சென்றுள்ளனர். கணவன், மனைவி இருவரும் வீட்டின் தரைதளத்தில் தூங்கியுள்ளனர். மறுநாள் காலை (நேற்று ) மாடியில் இருந்து எழுந்து வந்த குழந்தைகள், வீட்டிற்குள் தனது தாய் கழுத்தில் காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதுள்ளனர். இவர்களின் கதறலை கேட்ட அப்பகுதியினர் விரைந்து வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்துள்ளனர். அதன்பின்னர் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மனைவி மீது நடத்தை சந்தேகத்தில் இருந்த பாபு, நள்ளிரவில் மீண்டும் மனைவியிடம் தகராறு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த கணவர், மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தலைமறைவானதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஸ்ரீதேவி யின் சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான பாபுவை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஆம்பூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A brutal husband absconded after strangling his wife near Ambur