பயணக் கட்டணத்தை அறிவிக்காமல் உயர்த்திய தனியார் பேருந்துகள்; பயணிகள் கடும் அதிர்ச்சி..!
Passengers are shocked as private buses increase fares without informing them
ஈரான் போர் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதன் தாக்கம் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், வீடு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலைகளை அதிரடியாக உயர்த்தின.
இதன் எதிரொலியாக அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இந்த டீசல் விலை உயர்வு காரணத்தால், தமிழ்நாட்டில் லாரி வாடகைகளும் உயர்த்தப்பட்டன. இது மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது.
இந்நிலையில், தற்போது ஈரான் – அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹார்மூஸ் நீரிணை திறக்கப்பட்டுள்ளது. இதனால், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து, இன்று வணிக சிலிண்டர்களின் விலை சென்னையில் ரூ.172.50 குறைந்து ரூ.3,106-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி தொடர்கிறது.
இந்நிலையில், திருப்பூரில் தனியார் பேருந்துகளின் கட்டணம் அறிவிக்கப்படால் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. திடீரெனெ உயர்த்தப்பட்ட இந்தக் கட்டணத்தினால், பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதன்படி, திருப்பூரில் இருந்து கோவை செல்ல தனியார் பேருந்துகளில் 36 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 42 ரூபாய் வசூலிக்கப்படும் என தனியார் பேருந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

டீசல் விலை உயர்வு மற்றும் பராமரிப்பு செலவினங்கள் உயர்ந்துள்ள சூழலில் கடந்த 10 ஆண்டுகளாக பேருந்து கட்டணம் உயர்த்தப்படாததால் தினந்தோறும் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகவும், இதனால் பேருந்து கட்டணங்களை உயர்த்தி உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இவ்வாறு அறிவிக்கப்படாமல் கட்டணத்தை உயர்த்தியதால் காரணமாக மாணவர்கள் மற்றும் எளிய பொதுமக்கள் பாதிப்படையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூரைத் தொடர்ந்து மற்ற இடங்களிலும் தனியார் பேருந்து பயணக் கட்டணம் உயருமோ எனும் அச்சமும் பொதுமக்கள் இடையே எழுந்துள்ளது.
English Summary
Passengers are shocked as private buses increase fares without informing them