வயிற்றுப் பசிக்காக குழந்தையை விற்ற பெற்றோர்...! ரூ.1.39 லட்சத்திற்கு விலைபோன பச்சிளம் குழந்தை...! - பெற்றோர் உள்பட 3 பேர் கூண்டோடு கைது...!
Parents who sold their child hunger newborn baby sold 1point39 lakh 3 people including parents arrested
சேலம் அருகே குடும்ப வறுமையின் கொடூரமான விளைவாக, பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ரூ.1.39 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தம்பதி உள்பட 3 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.சேலம் மாவட்டம் அரியானூர் அருகே சந்தனகாடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன்.

தறித்தொழிலாளியான இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தையும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.சீனிவாசனுக்கு நிலையான வேலை இல்லாததால், குடும்பத்தின் பொருளாதார நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதே சவாலாக மாறிய நிலையில், குடும்ப வறுமை அவர்களை கடுமையாக வாட்டி வந்தது.
இந்நிலையில், கவிதா 4-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். கடந்த 19-ஆம் தேதி அரியானூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.ஏற்கனவே மூன்று குழந்தைகளை வளர்த்து வரும் சூழலில், புதிதாக பிறந்த குழந்தையையும் எவ்வாறு பராமரிப்பது என்ற கவலை தம்பதியரை மிகுந்த மனஅழுத்தத்துக்கு உள்ளாக்கியது.
இதன் பின்னர், புதிதாக பிறந்த பெண் குழந்தையை ராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திரகுமார் - முத்துலட்சுமி தம்பதியிடம், சேலம் பெரியபுதூரில் மளிகைக் கடை நடத்தி வரும் உறவினர் ராமமூர்த்தி மூலம் ரகசியமாக ரூ.1.39 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக தெரிகிறது.இதுகுறித்து கிடைத்த புகாரின் பேரில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, குடும்ப வறுமை காரணமாக குழந்தையை வளர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் பணத்திற்காக குழந்தையை விற்றதாக சீனிவாசன் - கவிதா தம்பதி ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து குழந்தையை வாங்கிச் சென்ற இந்திரகுமார் - முத்துலட்சுமி தம்பதியிடம் கொண்டலாம்பட்டி காவலர்கள் விசாரணை நடத்தினர்.
பிரச்சினை பெரிதாகியதால் குழந்தையை மீண்டும் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து, கொண்டலாம்பட்டி காவலர்கள் ராமநாதபுரம் சென்று அங்கிருந்த குழந்தையை பாதுகாப்பாக மீட்டு சேலத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அந்த குழந்தை பாதுகாப்பு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவலர்கள், குழந்தையை வாங்கிய இந்திரகுமார் - முத்துலட்சுமி தம்பதியரையும், இந்த பரிவர்த்தனைக்கு உடந்தையாக இருந்த ராமமூர்த்தியையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Parents who sold their child hunger newborn baby sold 1point39 lakh 3 people including parents arrested