எதிர்காலத்தை ரம்மியால் கெடுத்து, வழிப்பறி திருடனாக விளையாட்டு வீரர்.. ரம்மி அடிமைகளே திருந்துங்கள்.!
Online Rummy Played Kanyakumari Youngster Did Chain Snatching
மாநில கூடைப்பந்து வீரர், பொறியியல் பட்டதாரி இளைஞர் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் செயின் பறிப்பு திருடனாக மாறியது நடைபெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல், குளச்சல், இரணியல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக, பெண்களிடம் இரு சக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்கள் நகையை பறித்து செல்வதாக புகார் எழுந்தது.
இது தொடர்பான புகார்கள் அடுத்தடுத்து காவல் நிலையத்திற்கு வரவே, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தனர். இதன்போது, இளைஞன் ஒருவனை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் மடக்கி விசாரணை செய்கையில், ஈத்தவிளை பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஜஸ்டின் ராஜ் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், ஜஸ்டின் ராஜ் மாநில கூடைப்பந்து வீரர் என்பதும், பொறியியல் பட்டதாரி என்பதும் உறுதியானது. விசாரணையில், ஊரடங்கு காலத்தில் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்த ஜஸ்டின் ராஜ், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் முதலில் சிறிய தொகையை கட்டி விளையாட தொடங்கியுள்ளார்.
ரூ.நூறு, ரூ.ஆயிரம் என்று ஆரம்பித்த தொகை பின்னாளில் இலட்சக்கணக்கில் அதிகரித்து, அனைத்தையும் ரம்மியில் இழந்துள்ளார். ரம்மி மீதான மோகம் மற்றும் விட்டதை பிடிக்கிறேன் என்று தாயின் நகையையும் திருடி சென்று அடமானம் வைத்து விளையாடியுள்ளார்.

இதன்பின்னர், அங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளில் செயின் திருட்டில் ஈடுபட்டு, அதனையும் அடமானம் வைத்து ரம்மி விளையாடி வந்த நிலையில், அதனையும் இழந்துள்ளார். இதனையடுத்து ஜஸ்டின் ராஜை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். மேலும், 10 சவரன் நகைகளை மீட்ட காவல் துறையினர், அவனின் வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கூடைப்பந்தில் மாநில அளவில் அடையாளம் பெற்று, ஆன்லைன் ரம்மி மோகத்தால் தனது எதிர்கால வாழ்க்கையையே இழந்துள்ள சோகம் ஆன்லைன் ரம்மி அடிமைகளாக இருக்கும் இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் உதாரண பாடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
Online Rummy Played Kanyakumari Youngster Did Chain Snatching