செவிலியர் போராட்டம் உச்சக்கட்டம்...! 700+ கைது... இன்று அமைச்சருடன் தீர்மான பேச்சுவார்த்தை...!
nurses struggle peak 700 Arrested Resolution Discussion Minister Today
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் சென்னை நகரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.பி. செவிலியர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தனர்.மேலும், 700-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டு, முதலில் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர்.
ஆனால், அங்கும் செவிலியர்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்ததால், அவர்களை மீண்டும் கைது செய்த போலீசார், ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படாததால், செவிலியர்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர்.
பின்னர் மண்டபத்திலிருந்து வெளியேறிய அவர்கள், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் நடைபெறும் இந்த போராட்டம் நேற்று நான்காவது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில், போராட்டத்திற்கு தீர்வு காணும் நோக்கில், இன்று (திங்கட்கிழமை) கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் செவிலியர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்த முக்கிய சந்திப்பில் உடன்பாடு எட்டப்பட்டால், நீண்ட நாட்களாக நீடிக்கும் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
English Summary
nurses struggle peak 700 Arrested Resolution Discussion Minister Today