நெல்லை ஐ.டி. ஊழியர் கொலை; மேலும் ஒருவரை கைது செய்த போலீஸ்!
Nellai IT employee murdered police arrested another person
கவின்குமார் கொலை வழக்கில் சுர்ஜித்திற்கு உதவியதாக அவரது சித்தி மகன் ஜெயபாலனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
கடந்த மாதம் 27ம் தேதி நெல்லை பாளையங்கோட்டையில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த இளைஞர் கவின்குமார் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார்.இந்த விவகாரத்தில் காதலியின் சகோதரன் சுர்ஜித் என்பவர் போலீசில் சரணடைந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காதலித்த இளம்பெண்ணின் பெற்றோரான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சரவணன், கிருஷ்ணவேணி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில், இளம்பெண்ணின் தந்தை சரவணனையும் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து , கவின்குமார் கொலை வழக்கு கடந்த மாதம் 30ம் தேதி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.அப்போது , சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணனை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அதேபோல், கைதான சுர்ஜித்தின் சகோதரி மற்றும் அவரது தாயாரான சஸ்பெண்ட் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் தூத்துக்குடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கவின்குமார் கொலை வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்தனர். கவின்குமார் கொலை வழக்கில் சுர்ஜித்திற்கு உதவியதாக அவரது சித்தி மகன் ஜெயபாலனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட ஜெயபாலனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் கவின்குமார் கொலை வழக்கில் கைதான நபர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
English Summary
Nellai IT employee murdered police arrested another person