ஆரணி அருகே, சமூகப்பணியில் அசத்தும் பட்டதாரி இளைஞர்கள்...!
Near Arani, Graduate youth excelling in Social Work
ஆரணி அருகே, சமூகப்பணியில் பட்டதாரி இளைஞர்கள் அசத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், அரியப்பாடி கிராமத்தில் செயல்பட்டுவருகிறது அப்துல்கலாம் பசுமை இயக்கம். இந்த இயக்கத்தில் சுமார் 400 படித்த பட்டதாரி இளைஞர்களும் பெண்களும் உறுப்பினர்களாக உள்ளனர். டிசம்பர், 2020 ஆம் ஆண்டு சில நண்பர்களால் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அமைப்பிற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசுப்பணியாளர்கள் என அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இளைஞர்களுக்கு சமூக அக்கறை எல்லாம் குறைந்துவிட்டது. அவர்கள் கைபேசியில் மூழ்கி வீணாகப் பொழுதைக் கழிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டிற்கு நடுவில்தான் சாதித்துக்காட்டி வருகிறார்கள் அரியப்பாடி அப்துல்கலாம் பசுமை இயக்கத்தை சார்ந்த நண்பர்கள்.
சில மாதங்களுக்கு முன் தங்கள் ஏரிக்கு வந்துகொண்டிருந்த கால்வாய் விளைநிலமாக மாறிவிட்டதை அறிந்த இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து ஜவ்வாதுமலையிலிருந்து ஓடிவரும் நாகநாதியிலிருந்து புதுப்பாளையம் வழியாக கால்வாய் எடுத்து அரியப்பாடியிலிருக்கும் பெரிய ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர முயற்சி செய்தனர்.
இப்பணியை நிறைவேற்ற அரசாங்கத்திடமும் அரசியல்வாதிகளிடமும் கோரிக்கை வைத்துக் காத்திராமல், இளைஞர்களே களத்தில் இறங்கியுள்ளனர். கால்வாய்ப் பணிக்காக முதலில் இயக்கத்திலிருக்கும் நண்பர்கள் ஒவ்வொருவரும் சிறு, சிறு தொகையை கொடுத்துள்ளனர். அதனைக்கொண்டு ஜேசிபி எந்திரத்தின்மூலம் கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் கால்வாய் தோண்டும் பணியைத் தொடங்கியுள்ளனர். சுமார் 5 கி.மீட்டர் தூரம் வரை தோண்டப்பட்டுள்ள கால்வாய் தூர்வாரும் பணி ஒரு கட்டத்தில் பணமின்றி நின்றுபோக, கிராமத்தினர் கோயில் உண்டியலில் இருந்த பணத்தை தந்து உதவியிருக்கிறார்கள். அத்துடன் சமூக சேவை நோக்கம் கொண்ட பொதுமக்களும் பண உதவி செய்துள்ளனர். இத்தகைய கூட்டு முயற்ச்சியால் சில மாதங்களிலேயே கால்வாய் அமைத்துள்ளனர். தற்போது சுமார் 5 கி.மீட்டர் தூரம் கால்வாய் தோண்டப்பட்டு கால்வாய்க்கு இறுபுறமும் கரைகளில் சுமார் 500 மரக்கன்றுகளையும் பனைவிதைகளையும் நட்டு பராமரித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்துல்கலாம் பசுமை இயக்கத்தைச் சேர்ந்த நண்பர்கள் சிலரிடம் பேசியபோது,
’எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்து சுமார் 5கி. மீட்டர் தொலைவுக்கு கால்வாய் தோண்டி முடித்துவிட்டோம். ஆனாலும் இன்னும் பெரிய ஏரியோடு கால்வாய் இணைக்கவில்லை. அடுத்து கிராமத்தின் வழியாக கால்வாய் செல்கிறது. எனவே, கிராமத்தில் வீடுகளுக்கு முன் தோண்டப்பட்டிருக்கும் எரிக்கால்வாயை சிமெண்ட் காங்கிரட் அமைத்து அரசு மூடித்தந்து உதவினால் புதியதாக தோண்டப்பட்டுள்ள இந்த கால்வாயை எளிதாக பெரிய ஏரியுடன் இணைத்துவிடமுடியும். எங்களின் இந்த கோரிக்கையை அரசு உடனடியாக செய்துதரும் என நம்புகிறோம். அத்துடன், சில நாட்களாக தற்போது பெய்கின்ற மழைக்கே கால்வாயில் தண்ணீர் வரத்தொடங்கியுள்ளது. அடுத்து பருவமழைத் தொடங்கும்முன் இந்த கால்வாயை ஏரியுடன் இணைத்துவிட்டால் எங்கள் பகுதிக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் விவசாயம் செழிக்கும்’ என்கின்றனர்.
English Summary
Near Arani, Graduate youth excelling in Social Work