பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு: குற்றம் புரிந்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!
Nayinar Nagendran urges arrest of anti social elements involved in human waste contamination of schools water tank
'திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி ஊராட்சி தொடக்கப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்திருப்பதாக எழுந்திருக்கும் புகார் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த புகார் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி குற்றம் புரிந்த சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும்' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
'திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி ஊராட்சி தொடக்கப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்திருப்பதாக எழுந்திருக்கும் புகார் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பள்ளி மாணவர்களுக்கான காலை உணவை சமைக்க வைத்திருந்த உபகரணங்களை சேதப்படுத்தி, குடிநீர் தொட்டியிலும் மனிதக் கழிவுகளை கொட்டியிருப்பதாக வெளிவந்துள்ள தகவல்கள், குற்றவாளிகளின் மனதில் மனிதத்தன்மையோ, போலீசார் மீது பயமோ இல்லாததையே காட்டுகிறது.
பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி முதல், பச்சிளம் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் குடிநீர் தொட்டி வரை சமூக விரோதிகளால் மனிதக் கழிவு கலக்கப்படும் அவலம் தொடர்ந்து வரும் நிலையில், இது குறித்து எப்போது வாய் திறப்பார் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள்?
சட்டம் ஒழுங்கைச் சீரழித்து சமூக விரோதிகளின் அழிச்சாட்டியத்தை நிலைநாட்டுவது தான் திராவிட மாடல் ஆட்சியா? தொடக்கப் பள்ளி சிறுவர் சிறுமியரின் உயிரின் மீதும், சமூக நீதியின் மீதும் சிறிதும் அக்கறை இருந்தால், உடனடியாக தீவிர விசாரணை நடத்தி குற்றம் புரிந்த சமூக விரோதிகளைக் கைது செய்ய வேண்டும் என தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன்.' என்று அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
English Summary
Nayinar Nagendran urges arrest of anti social elements involved in human waste contamination of schools water tank